கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசின் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப் பட்டு, தங்கள் குரல்வளை நெரிக்கப்பட்டு வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இத்தனை நாட்களாக அடக்கப்பட்டிருந்த தங்கள் சமுதாயங்களுக்கு இப்போதாவது ஒரு சிறிய வாய்ப்பு கண் முன் தெரிகிறதே என்ற மகிழ்ச்சியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு அதிமுக., திமுக., மதிமுக., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், சாத்தியமற்றது என்று கருத்து தெரிவித்தன.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக., அதிமுக., திமுக., உள்ளிட்ட பிரதான கட்சிகள், தங்கள் சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்ததை பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினர் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இத்தனை நாட்களாக ஒடுக்கப் பட்டிருந்த தங்களின் குரலை மேலும் நசுக்கும் இவர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு எங்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள் என்று குமுறுகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் நன்றியை தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.