இதுகுறித்து அவர்கள் உடனடியாக சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வறுமையின் காரணமாக பெற்ற தாயின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாததால் அவரது மகனே குப்பை தொட்டியில் வீசி சென்ற பரிதாப சம்பவம் தெரியவந்துள்ளது.
பிணமாக கிடந்த அந்த பெண்ணின் பெயர் வசந்தி (வயது 50). அவருடைய கணவர் நாராயணசாமி. இவர்களுக்கு முத்துலட்சுமணன் (29) என்ற மகன் உள்ளார். நாராயணசாமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு சென்று, அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் வசந்தி தனது மகன் முத்துலட்சுமணனுடன் வசித்து வந்தார். முத்துலட்சுமணன் கோவில் பூசாரியாராக உள்ளார். போதிய வருமானம் இல்லாமல் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வசந்தி நோய்வாய்ப்பட்டு இருந்த போதிலும் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத பணப்பற்றாக்குறையுடன் முத்துலட்சுமணன் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தரிக்கிறார். இறந்த தனது தாய்க்கு இறுதிச்சடங்கு செய்ய அவரிடம் பணம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து உள்ளார். தனது வீட்டுக்கு அருகே உள்ள குப்பைத்தொட்டிக்கு அருகில் தாயின் உடலை வீசினால் அதை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்து சென்று அடக்கம் செய்து விடுவார்கள் என்று நினைத்து அங்கு தாயின் உடலை வீசி உள்ளார். இது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வசந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது சமூகத்தை சேர்ந்தவர்களின் உதவியுடன் இறுதிச்சடங்கு நடந்தது.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வறுமையின் கொடுமையால் இறுதிச்சடங்கு செய்ய இயலாமல் பெற்ற தாயின் உடலை மகனே குப்பையில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.