பழம்பெருமை வாய்ந்த இலக்கிய மாத இதழான கலைமகள் இதழின் தீபாவளி மலர் 2021ன் வெளியீட்டு நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. தொடர்ந்து, மலர் அனைத்து இதழ் விற்பனைக் கடைகளுக்கும் அனுப்பப் பட்டு வருகிறது.
கலைமகள் தீபாவளி மலரை கலைமகள் பதிப்பாளர் பிடிடி ராஜன் வெளியிட, பாரத தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் மேதகு ஆர் வெங்கட்ராமன், மேதகு சங்கர் தயாள் சர்மா, மேதகு கே ஆர் நாராயணன் மற்றும் மேதகு டாக்டர் அப்துல் கலாம் ஆகியோருக்கு தனிச் செயலராக இருந்தவரும், தற்போது மஞ்சரி இதழின் ஆசிரியராக இருப்பவருமான ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றார். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் பேராசிரியர் ரகுநாதன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலரைப் பெற்றுக் கொண்டார்.
மலர் குறித்து கலைமகள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் குறிப்பிட்ட போது, கலைமகள் தனது 90வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்தக் காலக்கட்டத்தில் இந்த மலர் வெளியாகியிருப்பது சிறப்பு!
தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் ஏற்கனவே கலைமகள் தீபாவளி மலரில் எழுதிய கதை கட்டுரைகள் கவிதைகள் இவ்வாண்டு தீபாவளி மலரை அலங்கரிக்கின்றன. இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கும்போது மனதிற்குள் ஓர் உத்வேகம் பிறக்கும் என்பது திண்ணம். இந்த தீபாவளி மலரை காலக்கண்ணாடி என்று சொல்லலாம்.
காளிதாசன் என்ற பெயரில் மகாகவி எழுதிய கட்டுரையும் ஆடிட்டர் சிவக்குமார் எழுதியுள்ள தலைசிறந்த பெண் ஆடிட்டர்களைப் பற்றிய கட்டுரையும் மலருக்கு அழகு சேர்க்கிறது. 90 ஆண்டுகால கலைமகள் வரலாற்றை கலைமகளின் இலக்கியப் பயணத்தை தனது பேட்டியின் மூலம் பதிவு செய்திருக்கிறார் கலைமகளின் பதிப்பாளர் ராஜன்.
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வாசகர்களிடம் நல்ல ஆதரவை பெற்றுள்ளது கலைமகள் தீபாவளி மலர். அலுவலகத்தில் மலர் கைவசம் இல்லை. ஆதரவு தெரிவித்த அத்தனை வாசக அன்பர்களுக்கும் மிக்க நன்றி… என்றார்.