![செங்கல்பட்டு மாமண்டூர் அருகே பாலாற்றில் குளிக்க சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி.. 1 images 2022 08 01T115919.742](https://dhinasari.com/wp-content/uploads/2022/08/images-2022-08-01T115919.742.jpeg)
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே காரில் வரும்போது அங்குள்ள பாலாற்றில் குளிக்க சென்ற மூவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வேதஸ்ரீ மற்றும் சிவசங்கரி ஆகியோரை பிணமாக மீட்டனர்.
சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது சசோதரர் குமரேசன். இவர்களது நண்பர் சீனிவாசன் (44). இவர்கள் ஆடி ஞாயிற்றுக்கிழமையான நேற்று உறவினர்களுடன் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு தங்கள் வீட்டுக்கு காரில் திரும்பியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே வரும்போது அங்கு உள்ள பாலாற்றில் குளிக்க முடிவு செய்தனர். அப்போது 6-ம் வகுப்பு மாணவியான வேதஸ்ரீ (10), 10-ம் வகுப்பு மாணவியான சிவசங்கரி (15) ஆகியோர் ஆற்றில் இறங்கி குளித்தனர். எதிர்பாராத விதமாக இருவரும் ஆற்றில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினரான சீனிவாசன் அவர்களை காப்பாற்ற பாலாற்றில் இறங்கினார். இதில் சீனிவாசனும் நீரில் மூழ்கினார்.
உடன் வந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வேதஸ்ரீ மற்றும் சிவசங்கரி ஆகியோரை பிணமாக மீட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு சீனிவாசனை பிணமாக மீட்டனர். இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலாற்றில் மூழ்கி இறந்த அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.