சென்னை: நடிகர் கமல்ஹாசன் பங்குபெற்று நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த ‘சர்வாதிகாரி டாஸ்க்’ பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், சென்னை என்எஸ்சி போஸ் ரோடு ஒய்எம்சிஏ கட்டிடத்தில் குடியிருக்கும் லூசியாள் ரமேஷ் என்வர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார் கமல்ஹாசன். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா என்ற பெண் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். வடநாட்டில் இருந்து வந்த ஐஸ்வர்யாவிற்கு தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி செய்தவர்களின் நிலை என்ன ஆனது என தெரியாது என்று சக போட்டியாளர் ஒருவர் கூறுகிறார்.
இதனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமல்ஹாசன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.