மாணவ சமுதாயத்திடம் பரிவு காட்டி இலவச திட்டங்களை அறிவித்து கல்வி முன்னேற்றத்துக்கு உதவிய முன்னாள் முதல்வர் ‘அம்மா’ சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்! அதிமுக.,வினர் அராஜகத்தால் கோவையில் ஏபிவிபி மாணவர்களை அடித்து இழுத்துச் சென்றது கோவை மாநகர காவல் துறை!
கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், கல்வி உதவி தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த இரண்டு மாணவர் மீது பிணையில் வர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில், கல்வித் துறையில் மாணவர் சேர்க்கை முதல் துணை வேந்தர் நியமனம் வரை வெளிப்படையான ஏலம் நடப்பதாகவும், மாணவர்களுக்கான கல்லூரி கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கைகளுடன் நிலுவையில் உள்ள கல்வி உதவி தொகையை வழங்க வேண்டும், இலவச பேருந்து பயண அட்டைகளை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பிற்பகல் அவ்வமைப்பை சேர்ந்த மாணவர்கள் கோவை அவினாசி சாலையிலுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலையிடம் மனு அளித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.அரவிந்த் தலைமையில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர், ஜெயலலிதா சிலை முன் இந்தக் கோரிக்கைகளை வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அரவிந்த் செய்தியாளர்களிடம் கூறியபோது, மாணவ சமுதாயம், தங்களுக்கான உரிமைகளுக்காகப் போராடுகிறது. மாணவ சமுதாயம் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறது. ஆனால் மநில அரசு எதையும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. எனவே, முன்னாள் முதல்வரிடம் நாங்கள் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்துகிறோம்…
மாநில அரசு, கல்விக் கட்டண விகிதத்தை நிர்ணயிப்பதில் தோல்வியடைந்துள்ளது. ஒரே பாடத்திட்டங்களுக்கு வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு கட்டணங்கள். கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் இலவச பஸ் பாஸும் வழங்கவில்லை. கடந்த ஆறு மாதங்களில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எஸ்சி/எஸ்டி மாணவர்கள் தங்கும் விடுதிகள் சமூக விரோத கும்பல்கள் தங்கும் கூடாரம் ஆகிவிட்டிருக்கிறது. அதை கண்காணிக்க அரசு முயல்வதில்லை என்று கூறினார்.
இதனிடையே அதிமுக.,வைச் சேர்ந்த கே.பி.ராஜு தலைமையில் சிலர் ஏபிவிபி மாணவர்களுடன் மல்லுக்கு நின்று வாக்குவாதம் செய்தனர். இதனால் பதற்றம் எழுந்தது. இதனிடையே போலீஸாருக்கு அவர்கள் கொடுத்த தகவல் மூலம் அங்கே ரேஸ் கோர்ஸ் போலீஸார் விரைந்தனர். அதிமுக.,வினரின் அராஜகத்தை அடுத்து மாணவர்கள் சிலர் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் அதிமுக.,வினர் துரத்திச் சென்று இரண்டு மாணவர்களைப் பிடித்து வைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீது பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏபிவிபி மாணவர் அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட தகவலில்…
தமிழகத்தில் அரச பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. எடப்பாடி தலைமையிலான அதிமுக., அரசு மாணவர்களை வஞ்சிக்கிறது. மாணவர் ஜனநாயகத்தையும் சிதைத்து கைது வழக்கு சிறை என அடக்குமுறைகளை ஏவி வருகிறது.
கோவையில் மாணவர் தலைவர் அரவிந்த் மற்றும் மணிமாறன் தலைமையிலான மாணவர்கள் இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கக் கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை முன் மனு கொடுத்து போராட்டம் நடத்தியதற்கு தடியடி கைது வழக்கு சிறை என பல வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்தி உள்ளது கோவை மாநகர காவல்துறை! என்ன அநியாயம்? எடப்பாடி அரசே மாணவர்களை உடனடியாக விடுதலை செய்! இல்லையேல் உங்கள் ஆட்சி கவிழ நாங்களே காரணமாக இருப்போம்! அம்மாவின் ஆன்மா உங்களை சும்மா விடாது! எச்சரிக்கை! – என்று தகவல்களை வைரலாக்கி வருகின்றனர்!