இதில் இன்னொரு மாணவர், ராஜபாளையத்தை சேர்ந்தவன். கபில் ஓசூரை சேர்ந்தவன். இந்த பள்ளிக்கென்று தனியாக ஒரு மாணவர் விடுதி உள்ளது. இவர்களுக்குள் என்ன பிரச்னை என்ற முழு விவரமும் தெரியவில்லை. ஆனால் நேற்றிரவு கூட இருவருக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. அது இன்று காலைவரை தொடர்ந்துள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இன்னொரு மாணவர், கபில் ராகவேந்திராவை கத்திரிக்கோலால் குத்தி கிழித்து தாக்கி உள்ளான். மேலும் கிரிக்கெட் ஸ்டெம்பாலும் அவன் மண்டையிலேயே மிக மோசமாக தாக்கியும் உள்ளான். இதில் கபில் ராகவேந்திரா ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்து விட்டான்.
இச்சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. இது குறித்து தாக்குதலில் ஈடுபட்ட அந்த மாணவரை கொடைக்கானல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கபில் ராகவேந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மாணவனை இன்னொரு மாணவனே இவ்வளவு கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!