திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் அரசுப்பள்ளி மாணவர்களுடன் சில மணி நேரம் கலந்துரையாடி தனது வாழ்க்கைச் சம்பவத்தை மாணவர்களுக்கு கூறியதன் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்த்தார்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்துக்குள்பட்ட, புளியங்குடி அருகே உள்ள மிகவும் குக்கிராமமான மடத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடினார். அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், அவர்களது பல்திறனை உயர்த்தும் நோக்கிலும், கடையநல்லூர் வட்டாட்சியர் அழகப்பராஜா சார்பில் மாணவர்களுக்கு ஆட்சியர் புத்தகங்களை வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்களுடன் பேசிய ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ், “நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார். மாணவர்கள் அவரவர் விருப்பங்களைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது:
9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவனமாகப் படிக்க வேண்டிய காலம். இந்த காலம்தான் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியது ஆகும். உங்களுக்கென்று கண்டிப்பாக எதிர்காலக் கனவு ஒன்று இருக்க வேண்டும்.. குறிக்கோளை மனதில் உருவாக்கி கொண்டு அதனை நோக்கி பயனிக்க வேண்டும். அந்தக் குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான தொடக்க நிலை விவரங்களை ஆசிரியர்கள் வாரத்திற்கு ஒரு முறை நேரம் ஒதுக்கி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பின்பு இதே தேதியில் நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்யுங்கள். உங்களின் குறிக்கோளை எட்ட படிப்படியாக உழைக்க வேண்டும். மாடியிலுள்ள குடிநீர்த் தொட்டியைப் பார்க்கச் செல்ல வேண்டுமென்றால் ஏணி வைத்து அதிலுள்ள படிகளில் ஒன்றன் பின் ஒன்றாக ஏறி அந்த தொட்டியைப் பார்க்க வேண்டும். நேரடியாக அந்த தொட்டியை எட்டிப் பிடிக்க முடியாது. ஏணியிலும் 4 படிகளைத் தாண்ட நினைக்கக் கூடாது. அது தோல்வியைத் தரும்.
இலக்கை அடைய, முயற்சி தேவை. பல்வேறு இடையூறுகள் அதில் வரும். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள் ஆட்சியர் கனவு எளிதாக நிறைவேறவில்லை. பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் வர முடிந்தது. கஷ்டப்பட்டு உழைத்தால் சாதிக்கலாம். குறிக்கோளை நோக்கி மட்டுமே பயணப்பட வேண்டும். வாழ்வில் வெற்றி பெற விருப்பங்கள் தேவை. ஆசை இருந்தால் அதை நிறைவேற்ற உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நம்முடைய குறிக்கோளை, கனவைச் சொல்லும் போது நமது நண்பர்கள் கூட சிரிப்பார்கள். எப்படி ஆக முடியும் எனக் கேட்பார்கள். நான் எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக ஆக விரும்புகிறேன் என கூறியபோது, எனது நண்பர்கள் எப்படி முடியும்? என கேட்டு நகைத்தார்கள். நம்பவில்லை.
ஆனாலும், நான் விடாமுயற்சியுடன் முயற்சித்தேன். ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்தேன். சும்மா முயற்சி செய்து பார்ப்போம்; வந்தால் வரட்டும்; வரவில்லை என்றால் விட்டு விடுவோம் என நினைக்காமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்களுக்காகப் படிக்கிறோம்;
கிடைத்த பாடப்பிரிவைப் படிக்கிறோம் என்று இல்லாமல், குறிக்கோளுடன் படித்தால் இலக்கை அடையலாம். ஐஏஎஸ் அதிகாரி என்று இல்லை. நமது விருப்பம் எனனவோ, அதில் சிறந்தவராக மாற இடைவிடாது முயற்சி செய்யுங்கள். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து நிச்சயம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் விசாரிப்பேன்” என்ற அவரின் இந்த ஆற்றல் தரும் பேச்சுக்கு மாணவர் கூட்டம் உற்சாகமாக கரவொலி எழுப்பி மகிழ்ந்தது.