நாங்களே உண்மையான ‘தமுமுக’! நீக்கப் பட்டவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று, தென்காசியில் தமுமுக மாநிலச் செயலாளர் மைதீன்சேட் கான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.
தென்காசி பத்திரிக்கையாளர்கள் சங்க கட்டடத்தில் வைத்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநிலச் செயலாளர் மைதீன்சேட்கான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவிலில் நடந்த மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவியில் பொறுப்பு வகித்த ஹைதர்அலி, பொதுச் செயலாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து நீக்கப்பட்டார்கள்.
மேலும் தமுமுக டிரஸ்ட் பொறுப்புகளிலிருந்தும் அவரும் அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எனவே அவருடைய ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டு மாநில தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மாவட்டத் தலைவர் நைனார் முகமது, கோக்கர்ஜான் ஜமால், கொலம்பஸ் மீரான், கோகோ அலி, அபாபலில் மைதீன், சலீம், பொன்னானி சேட், எஸ்.வி.கரை ஷெரீப், அச்சன்புதூர் பீர்மைதீன், பொட்டல் சித்திக், ஆதன் பில் கனிபா, பொட்டல் மீரான், செங்கை ஆரீப், பண்பொழி மைதீன், வீராணம் முத்தலீப் ஆகியோர் தாங்கள் தான் தமுமுக என கூறிக் கொண்டு வருகின்றனர்.
ஆனால், இவர்கள் மீது மாநில தமுமுக தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நைனார் முகமது தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பொது இடங்களிலும், வலைத்தளங்களிலும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
அதில் சென்னை உயர் நீதிமன்றம் இவர்களை தமுமுக., பெயரையோ, அதன் கொடியையோ பயன்படுத்தக்கூடாது என இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால் அதை மீறி இவர்கள் அனைவரும் தலைமைக்கு எதிராக தொடர்ந்து தங்களை தமுமுக., என்றும் தங்களுக்கு தானே பொறுப்புகளை அறிவித்துக்கொண்டும் செயல்பட்டு வருகின்றனர்.
ஆகவே இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தும், காவல்துறையையும் உயர் நீதிமன்ற உத்தரவையையும் மதிக்காமல் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகின்றனர். எனவே இவர்கள் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும் தென்காசி இணை காவல்துறை கண்காணிப்பாளரும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.. என்றார்.
வரும் நவ.3 அன்று தென்காசியில் நடைபெற உள்ள மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என்றும், கூட்டத்திற்கு வரும் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா மற்றும் நிர்வாகிகளை சிறப்பாக வரவேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாகக் கூறினர்.
இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமுமுக மாநிலச் செயலாளர் மைதீன்சேட் கான், மாவட்டத் தலைவர் முகம்மது யாகூப், செயலாளர் அஹமதுஷா, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி, தமுமுக மாவட்ட பொருளாளர் முகம்மது பிலால், மாவட்ட துணைச் செயலாளர்கள் பண்பொழி செய்யது அலி, விசுவை அப்துல் காதர், தென்காசி நகர்த் தலைவர் சேட், நகர மமக செயலாளர் ஜாபர் உசேன், நகர தமுமுக செயலாளர் களஞ்சியம்பீர், பொருளாளர் திவான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.