தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ்ஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் 11ஆம் வகுப்பு, மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும் நீதிமன்ற நீதிபதியுமான மாரிக்காளை(பொ) தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிக்கு, அரசு குற்றத்துறை வழக்கறிஞர் பரணீந்தர், காவல் சார்பு ஆய்வாளர் மாரிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இவாஞ்சலின்டேவிட் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மூத்த வழக்கறிஞர் ஆதிபாலசுப்பிரமணியன் போக்குவரத்து சட்டவிதிகள் குறித்தும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதால் உண்டாகும் பிரச்னைகள் மற்றும் தீர்வு குறித்து மாணவியர்களிடம் விளக்கிப் பேசினார்.
காவல் சார்பு ஆய்வாளர் மாரிச்செல்வி காவலன் ஆப் குறித்து மாணவிகளிடம் விளக்கிக் கூறினார். மேலும் மாணவியர் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து காவல்துறையிடம் உடனடியாக புகார் அளித்து தீர்வு தேடிக்கொள்ள அறிவுறுத்தினார்.
அப்போது மாணவியர் சிலரும் தங்களுக்கு நேரும் சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து அங்கே பேசினர். தாங்கள் பேருந்துகளில் பயணிக்கும் போது கூட்டத்தைக் காரணம் காட்டி, நடத்துனா்கள் சிலர் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக புகார் கூறினர்.
இதனைக் கேட்ட நீதிபதி நிச்சயமாக, இது குறித்து போலீஸார் விசாரிப்பர் என்றும், சம்பந்தப்பட்ட நடத்துனா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வழி செய்யப்படும் என்றும் கூறினார். மாணவிகள் சட்டங்கள் குறித்த சந்தேகங்களை எழுப்பி அப்போது ஆலோசனை பெற்றனர்.
முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பிச்சம்மாள் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வ பணியாளர் ஜெயராம சுப்பிரமணியன் செய்திருந்தார்.
- செய்தி, படங்கள்: கோபி கண்ணன்