பெண்களை அவமதித்துப் பேசிய நடிகர் ராதாரவி பாஜக.,வில் சேர்ந்திருக்கிறார், இவரை எப்படி பாஜக.,வில் அனுமதித்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி.
பெண்கள் தங்கள் மீதான பாலியல் புகார் குறித்து மீடூ என்ற இயக்கத்தின் போது பல்வேறு தகவல்களை பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டனர். பொதுவெளியில் அவர்களின் கேள்விக் கணைகள் பலரது கவனத்தையும் பெற்றன.
இதில் ராதாரவி குறித்து பாடகி சின்மயி புகார் தெரிவித்திருந்தார். தனக்கு டப்பிங் யூனியனில் வாய்ப்பு மறுத்ததையும் முறைகேடாக தன் வாய்ப்புகளைக் கெடுத்ததையும் கூறியிருந்தார்.
மேலும், ராதாரவி நடிகை நயன்தாரா குறித்து மோசமான சொல்லாடல்களால் மேடையில் விமர்சனம் செய்த போது, சீதாமாதாவையும் குறிப்பிட்டு இழிவுபடுத்தியதையும் அப்போது சுட்டிக் காட்டியிருந்தார்கள்.
இந்நிலையில், இன்று நடிகர் ராதாரவி பாஜக.,வில் சேர்ந்ததற்கு தனது எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார் சின்மயி. பாஜக., பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் கட்சி என்று நினைத்திருந்தேன். ஆனால் ராதாரவியை எப்படி கட்சியில் சேர்த்தார்கள் என்று ஆச்சரியத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
முன்னதாக ராதாரவி திமுக., அதிமுக., என்று பயணப் பட்டு இன்று பாஜக.,வில் ஐக்கியமாகியிருக்கிறார்.