தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் தளவாய்புரம், அருகேயுள்ள மத்திமான்விளையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.
அந்த பள்ளியில் 19 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் ஒரு ஆசிரியர், ஆசிரியை பணியாற்றுகின்றனர். கடந்த 20 தினங்களுக்கு முன் தேரிகுடியிருப்பு பகுதியில் இருந்து பணி மாறுதல் பெற்று மத்திமான்விளை பள்ளிக்கு ஆசிரியர் சிங்காரவேல் வந்திருந்தார்.
அவர் பள்ளியில் படிக்கும் 4,5ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்து பள்ளிக்கு செல்ல மறுத்துவிட்டனர். ஆசிரியர் சிங்காரவேலை பார்க்க பெற்றோர்கள் மாணவிகளுடன் பள்ளிக்கு வந்தனர். ஆசிரியர் சிங்காரவேல் நேற்று பணிக்கு வரவில்லை. பெற்றோர்கள் தளவாய்புரம், காயாமொழி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்,
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும், என தெரிவித்தனர். துாத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெருமாள்சாமி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் சிங்கார வேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.