அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நிலா. தனது நிஜப்பெயருடன் மீரா சோப்ரா என்ற பெயரில் இந்தியில் நடித்து வருகிறார். மீரா சோப்ரா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார்.
மீரா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நெளிவதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில்தான் இப்படி புழுக்கள் நெளிவதாக மீரா சோப்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீ ஹில்டன் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும், ரூம் சர்வீஸ் மூலம் உணவு ஆர்டர் செய்தபோது அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
இதுபோன்ற ஓட்டல்களில் தங்கி அதிக கட்டணத்தை செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் புழுக்கள் உள்ள உணவை தருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக இந்த ஓட்டலில் தங்கியிருக்கிறேன். இங்கு வந்ததில் இருந்தே உடல்நிலை சரியில்லை. அதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.