புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளர் பரணி கார்த்திகேயன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சிக்குள் குழப்பமும், விரிசலும் ஏற்பட்டது. இதன் காரணமாக அதிமுகவில் இருந்து பிரிந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக என்ற புதிய கட்சி உருவானது.
தற்போது, அமமுக கட்சி உறுப்பினர்கள் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தாவி வருகின்றனர். ஏற்கனவே அமமுக கொள்ளை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ்ச்செல்வன் மற்றும் கலைராஜன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு திமுகவில் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமமுகவை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
அப்போது கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எஸ்.இரகுபதி எம்.எல்.ஏ, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர். இவர், அதிமுக எம்.எல்ஏ ரத்தின சபாபதியின் தம்பி ஆவார்.
அ.தி.மு.க மணமேல்குடி ஒன்றிய செயலாளராக 10 வருடங்கள் பணியாற்றியுள்ளார் பரணி கார்த்திகேயன். மணமேல்குடி நகராட்சி அ.தி.மு.க சேர்மேனாகவும் இருந்துள்ளார் பரணி கார்த்திகேயன்.
தி.மு.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதுக்கோட்டையில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அ.ம.மு.க-வில் என்ன பிரச்னை என்பது குறித்து அந்த மாநாட்டில் கூறுவேன். அ.ம.மு.க.விலிருந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் பல நிர்வாகிகள் தி.மு.கவில் இணைய உள்ளனர்.
தி.மு.க தலைமை மக்களுக்கும் எனக்கும் பிடித்துள்ளதால் தி.மு.க-வில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்
’கழக தலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில், புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக பணியாற்றியவரும், அறந்தாங்கி அதிமுக எம்.எல்.ஏ ரத்தின சபாபதியின் தம்பியுமான திரு. பரணி கார்த்திகேயன் அவர்கள் திமுகவில் இணைந்தார்’ pic.twitter.com/YKeyIgaRTs
— DMK (@arivalayam) September 3, 2019