பாஜக பிரமுகருக்கு எதிராக வழக்குப் பதிய உத்தரவிட்டதால் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கம்யூனிஸப் பின்னணி காங்கிரஸின் அதிகார பூர்வ வடஇந்திய ஊடகங்களும், திமுக.,வின் அதிகாரபூர்வ தமிழக ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.
இதனிடையே, தனக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைப்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில், பாஜக., பிரமுகர் குறித்து கேள்வி எழுப்பி உயர் நீதிமன்ற நீதிபதி பழி தீர்த்துக் கொண்டதாக வேறு ஒரு தரப்பினர் சமூகத் தளங்களில் தகவல்களைப் பகிர்ந்தனர்.
கடந்த செவ்வாயன்று வடகிழக்கு தில்லியில் வன்முறை தலைவிரித்தாடிய சூழ்நிலையில், அன்றைய நள்ளிரவில் அது குறித்த அவசர வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் தனது வீட்டில் விசாரித்தார். அப்போது ஒரு மருத்துவமனையில் அடைக்கலம் புகுந்த 22 பேரைப் பாதுகாப்பாக அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கக் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரிக்கப் படும் என்று அவர் அப்போது தெரிவித்தார். இதன் பேரில், அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வன்முறை தொடர்பான படக் காட்சிகளைப் பார்வையிட்ட நீதிபதி, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தற்போது பாஜக.,வுக்கு தாவிய கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யாத காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்தார். மேலும், நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு நீதிபதி முரளிதருக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாற்ற உத்தரவு வந்தது. இதனை அரசியலாக்கிய காங்கிரஸ் கட்சி, நீதித்துறை மீதான பாஜக அரசின் தலையீடு என குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மத்தியச் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நீதிபதி பணியிட மாற்றத்துக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பிப்ரவரி 12ஆம் தேதியே பரிந்துரைத்திருந்தது என்று சுட்டிக்காட்டினார்.
வழக்கமான பணியிட மாற்றத்தை அரசியலாக்கும் காங்கிரஸ் கட்சி, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதில் ஒரு சாதனையே படைத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், தமது பணியிட மாற்ற உத்தரவைப் பெற்று, அதனை ஏற்றுக் கொண்டு ஒப்பமிட்டிருந்த முரளிதர், பின்னர் எதோ ஓர் அழுத்தத்தில், பாஜக பிரமுகர் குறித்து, கேள்வி எழுப்பி, போலீஸாரிடம் கடுமையான கேள்விக் கணைகளைத் தொடுத்தார்… என்கின்றனர் சமுகத் தளங்களில்!