கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் விதமாக இந்திய அரசாங்கம் ஏப்ரல் 15 வரை கொடுக்கப்பட்ட அனைத்து சுற்றுலா விசாக்களையும் வருகிற மார்ச் 13 முதல் ரத்து செய்கிறது!
குடிமக்களை மிக அவசிய தேவையன்றி எந்த சர்வதேச நாடுகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மீறி சென்று நாடு திரும்பும் போது 14 நாட்கள் தனிமைப்படுத்திட வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது! வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களையும் இந்தியாவுக்கு வர வேண்டாம் என்றும் அப்படி வந்தால் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திட நேரிடும் என்று எச்சரித்துள்ளது!
உலகையே அச்சுறுத்தி வரும் ‘கொரோனா வைரஸ்’ பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் ஒரு தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி, அமெரிக்க, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகள் என பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் தொற்று பரவி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப் பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இந்த வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்… பிப்.15 ஆம் தேதிக்குப் பின்னர் இத்தாலி, ஈரான், சீனா, தென்கொரியா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்தியர்கள் உட்பட அனைத்து சுற்றுலா பயணிகளும் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும்… என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (ஓசிஐ) அட்டை வைத்திருப்பவர்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் உட்பட அனைத்து நாடுகளின் பயணிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த விசாக்கள் நாளை முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. இருப்பினும், ஐ.நா.சபை அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு திட்ட விசாக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகக் கூறப் பட்டுள்ளது.