இப்படித்தான் கேட்கிறார்கள் இன்றைய சென்னை குறித்த வீடியோ பதிவுகள், புகைப்படங்களைக் கண்டு! கொரோனா அச்சத்தால், எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் சென்னை, சென்னை தி.நகர் உள்ளிட்ட பகுதிகளை மனித நடமாட்டம் அதிகம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுவதைக் கண்டு, இப்படித்தான் கேட்கிறார்கள்.
சென்னையின் பெரும்பாலான நிறுவனங்களும் அடுத்த 10 நாட்கள் மிக முக்கியமான நாட்கள் என்று அரசு அறிவித்திருந்த காரணத்தால், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து முற்றிலும் மக்களை தடுத்து ஒரு தடையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், விடுமுறை அறிவித்து, வீட்டில் இருந்தே பணிகளை கவனியுங்கள் என்று சொல்லிவிட்டன.
சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது! இதனை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.
செய்தியாளர்களிடம் கூறிய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். இந்நிலையில், சென்னையில் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்ற செய்தி தவறானது என்று, சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் வழக்கம் போல் இயங்கும்! சிறு வணிக நிறுவனங்கள் இயங்க தடையில்லை! கடைகள் மூடப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இருந்த போதிலும், சென்னை நகரம் ஆட்கள் நடமாட்டம் இன்றி, வெறிச்சோடிக் காணப்படுகிறது. குறிப்பாக, சென்னை தியாகராய நகர் பகுதி இவ்வாறு இருந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு வெறிச்சோடிக் காணப்படுகிறது.