தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 14753 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். இதுவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 7,128 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று கொரோனாவால் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 66 பேர், டில்லியில் இருந்து வந்தவர்கள் 13 பேர், மேற்குவங்கத்தில் இருந்து வந்தவர்கள் 6 பேர், ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் 2 பேர், குஜராத், ம.பி., ஒடிசா, தெலுங்கானாவில் இருந்து வந்த தலா ஒருவரும், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவரும் அடங்கும். தமிழகத்தில் மொத்த பாதிப்பு 14,753 ஆக அதிகரித்துள்ளது.
ஈரோட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. ஈரோட்டில் 37 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது! கடந்த 37 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்தது ஈரோடு.
இன்று சென்னையில் இருவரும், தேனி, செங்கல்பட்டில் தலா ஒருவரும் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தமுள்ள 67 ஆய்வகங்கள் மூலமாக ஒரே நாளில் 12,653 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தற்போது 7,524 பேர் சிகிச்சையில் உள்ளனர்… என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.