மும்பையின் நிழல் உலக தாதா என்று கூறப் பட்டவரும், 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமானவராகவும் இருந்த தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கராச்சி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
மேலும், தாவூத் இப்ராமின் மனைவி சூபினா ஷெரீனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்தத் தகவல்களை மறுத்துள்ளார் தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம். தாவூத்தின் நிறுவனங்களான டி-கம்பெனீஸை கவனித்துக் கொள்கிறார்.
கராச்சியில் அவரின் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இந்தத் தகவலை பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ இயக்கத்தின் முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டது.
மும்பை டோங்கிரி பகுதியை சேர்ந்த தாவூத் இப்ராஹிம் மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், பாகிஸ்தானில்தான் வசித்து வருவதாக சொல்லப் பட்டாலும், அந்த நாட்டு அரசு அதை மறுத்து வருகிறது. எனவே தாவூத் இப்ராஹிம் குறித்த எந்த செய்திகளையும் அந்நாட்டு அரசு மறுத்து வருவது வாடிக்கை தான்!
கடந்த 2003ஆம் ஆண்டு தாவூத் இப்ராஹிமை சர்வதேச பயங்கரவாதியாக இந்தியாவும் அமெரிக்காவுக்கு அறிவித்தன.
தற்போது, பாகிஸ்தானில் இதுவரை 89,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,800 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடந்த தப்லீக் இ ஜமாஅத் மாநாட்டின் மூலம் பெருமளவில் கொரோனா வைரஸ் பரவியதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டி வந்தது.