கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
உயிரிழப்புகளும் ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு மருந்தே கிடையாதா என்று பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் பலர் இரவும் பகலுமாக உழைத்து வருகிறார்கள்.
தற்போதைக்கு நம் கையில் இருக்கும் ஒரே தீர்வு சுய பாதுகாப்பு , தனிமைப் படுத்துதல் மற்றும் கிருமி நாசினிகள் தெளிப்பது. இதை செய்து தான் அதிகப்படியான பரவலைத் தடுத்துக் கொண்டு இருக்கிறோம். குறிப்பாக சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
ஏனென்றால் பரவல் அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் பணியில் ஈடுபடும் போது அதிகப்படியான நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதை தடுப்பதற்காகத்தான் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்படும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் யோசனையை நடிகர் அஜித் வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய கார்த்திக் நாராயணன் சிகப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகளில் அஜித்தின் தக்க்ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இந்த திட்டத்தை மற்ற மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா பரவல் ஆரம்பத்தில் இருந்து அஜித் தரப்பில் அமைதியாக இருந்தாலும் சென்னையில் கொரோனாவிற்கு எதிரான போராட்டங்களில் அஜித்தின் பங்கு சத்தமில்லாமல் இருக்கிறது என்று மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.