மதுரையில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ தண்டியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,009ஆக உயர்ந்துள்ளது. இதை அடுத்து கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். மதுரை மாநகராட்சி சார்பிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.
மதுரை நகரில் தீவிர கொரோனா பரிசோதனை முகாம்கள்: மதுரை நகரில் பல்வேறு இடங்களில் மதுரை மாநகராட்சி சார்பில் புதன்கிழமை ஆழ்வார் பகுதியில் நடைபெற்ற முகாமை, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு சித்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார், மதுரை மாவட்ட நீதிபதி நசீமா பானு. டாக்டர் சுப்ரமணியம், மருந்துகளை வழங்கினார்.
கொரோனா தடுப்பு முகாம்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு கிராமத்தில் சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகமும் இணைந்து கொரோனா தடுப்பு முகாமை புதன்கிழமை நடத்தியது. இந்த முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவி சர்மிலா ஜி. ராஜாஜி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ராமன் முன்னிலை வகித்தார்.
அரசு மருத்துவமனை டாக்டர் கீதா, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். ஊராட்சி செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் மருத்துவ பரிசோதனை முகாமில் பங்கேற்றனர்.
மறவபட்டியில் கொரோனா பரிசோதனை முகாம்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ராஜாக்கப் பட்டி, மறவபட்டியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு, ஊராட்சிமன்றத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ராமன் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வள்ளி, முகாமை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனையின் மருத்துவர் கீதா, கொரோனா பரிசோதனைகளை நடத்தினார். ஊராட்சி செயலர் ரெகுபதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை நகரில் கொரோனா விழிப்புணர்வாக, போலீஸார் ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் மேற்கொண்டனர்!
மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா
உத்தரவுப்படி , மதுரை மாநகரில் உள்ள 22 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஆட்டோக்களில் ஒலிபெருக்கி பொருத்தி அதன் மூலம் கொரோனா விழிப்புணர்வு பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஊரடங்கு உத்தரவை மீறி வெளி இடங்களில் தேவை இல்லாமல் சுற்றித் திரிபவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைப்பது, சமூக இடைவெளியை கண்டிப்பாக அனைவரையும் கடைபிடிக்க வைப்பது
மற்றும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு முக கவசம் வழங்குவது என, அனைத்து காவல் அதிகாரிகளும் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்!
மதுரையில் வாகனத் தணிக்கை தீவிரம்: மதுரையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதன்கிழமை நகரில் பல இடங்களில் போலீஸார், வாகனங்களில் பயணித்தோரை அறிவுரைகள் வழங்கி அனுப்பினர்.
மதுரை நகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆலோசனையின் பேரில், போலீஸார் கோரிப்பாளையம் தேவர்சிலை, சிம்மக்கல், அண்ணாநிலையம், கே.கே.நகர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி காரணமின்றி, வெளியே சுற்றித் திரிந்தால், அபராதம் விதிகப்படும் என, ஆலோசனை வழங்கி அனுப்பினர்.
இருந்தபோதிலும், ஊரடங்கு காலத்தில் வாகனங்களை கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகிறது. கடந்த சில நாட்களாக மதுரை நகரில் வாகனப் போக்குவரத்து மிகுந்து வருவதால், போலீஸார் கெடுபிடியை காட்டத் தொடங்கியுள்ளனராம்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை