இந்திய அரசு சார் நிறுவனமான பிரசார் பாரதியின் டிடி சேனல் தவிர மற்ற அனைத்து செய்தி டிவி சேனல்களுக்கும் நேபாள அரசு தடை விதித்துள்ளது.
இந்திய பகுதிகளை இணைத்து நேபாளம் அண்மையில் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது! தங்களது நாட்டை ஒட்டிய இந்திய எல்லையில் இந்தியா சாலை அமைக்கக் கூடாது என இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தது நேபாளம்.
மேலும், நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததற்குக் காரணம் இந்தியாதான் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. இதனிடையே இந்திய எதிர்ப்பு பிரசாரங்களை நேபாள வானொலியில் ஒலிபரப்பப் படுவதாக எல்லையோர இந்திய கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பிரச்னைகள் காரணமாகவும், சீனாவின் தூண்டுதலினாலும், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதமர் இந்தியாவுடன் மோதல் போக்கை மேற்கொண்டார்.
இந்நிலையில் நேபாளம் அரசுக்கு எதிராக இந்திய டி.வி. சானல்கள் தவறான பிரச்சாரம் செய்து வருவதாக புகார் கூறியது நேபளம். இதை அடுத்து நேபாள நாட்டில் வியாழன் மாலையில் இருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.