பிரபல ராணி வார இதழின் ஆசிரியர் ராமகிருஷ்ணன் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தேன். அவரது தாயார் மிகச் சில தினங்களுக்கு முன் காலமானார். அதுகுறித்து அவரிடம் தொலைபேசியில் துயரம் விசாரித்தேன்.
கடைசிக் காலங்களில் தாயாருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்தது குறித்து மனம் நிறைவடைவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ராமகிருஷ்ணன் எழுத்தாளர்களிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். அவரது பண்பாடு நிறைந்த பேச்சுக்கள் இன்னும் செவிகளில் ஒலிக்கின்றன. தாயார் தாம் சென்ற இடத்திற்கு மிகச் சீக்கிரமே மகனையும் அழைத்துக் கொண்டுவிட்டார்.
நன்றாக ஆரோக்கியமாக தொலைபேசியில் உரையாடிய ஒருவர் திடீரென இறந்துவிட்டது திகைப்பை ஏற்படுத்துகிறது. வாழ்வின் நிலையாமையை என்னென்பது! `நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு. `
- திருப்பூர் கிருஷ்ணன்
(மூத்த பத்திரிகையாளர், அமுதசுரபி இதழாசிரியர்)