ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்குவதில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை உறுதியுடன் எடுத்து வருகிறது.
குறிப்பாக, ரயில் நிலையங்களை சுத்தமாகவும் சிறப்பான முறையில் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. தற்போது ரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த பயன்பாட்டுக் கட்டணம் ஒன்றை விதிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடுகின்ற முக்கிய ரயில் நிலையங்களில் இந்தக் கட்டண முறை விரைவில் அமலுக்கு வரும்.
ரயில் நிலையங்களை பயன்படுத்தும் கட்டணம் வசூலிப்பதன் மூலம் ரயில் நிலையங்களை நவீனப்படுத்தவும், கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, பயணிகளுக்கு கூடுதலான வசதிகள் செய்து தர முடியும்.
இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் கூறியபோது… முக்கிய ரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த சிறிய கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்படும். ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இது உதவும் என்று நம்புகிறோம்.
ரயில் நிலையம் முழுவதும் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்க இது உதவும். இந்தக் கட்டணம் மிகக் குறைந்த அளவில் இருக்கும். பயணிகளை பாதிக்கும் வகையில் இருக்காது. உலகத் தரமான வசதிகளை ரயில்வே கொடுப்பதற்கு இது பயனுள்ளதாக அமையும்.
இந்தியன் ரயில்வேயில் 7 ஆயிரம் ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றில் 10 முதல் 15 சதவீத ரயில் நிலையங்களில் மட்டுமே இந்தக் கட்டணம் விதிக்கப்படும். அதாவது சுமார் 1000 ரயில் நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.