நடிகை குஷ்பூவுக்கு மிகப் பெரிய பொறுப்பை அளித்தது கட்சி… ஆனா அவர் அதிலயே திருப்தி அடையவில்லை, அவரை கையாள்வது மிகவும் கடினம் என்று கூறினார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி!
நடிகை குஷ்பூ இன்று காங்கிரஸில் இருந்து விலகி, பாஜக.,வில் இணைந்துள்ளார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது இது குறித்துக் குறிப்பிட்டார்.
நடிகை குஷ்பூ கடந்த 6 மாத காலமாகவே கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்! விசுவாசத்தை மாற்றிக் கொள்வது அவருடைய சொந்த விஷயம். ஆனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு மிகப் பெரிய மரியாதையைக் கொடுத்தது. அகில இந்திய செய்தித் தொடர்பாளர் என்ற மிகப்பெரிய பதவியையும் அந்தஸ்தையும் கொடுத்தது. அதிலேயே குஷ்பூவுக்கு திருப்தி வரவில்லை! என்றால் அவரைக் கையாள்வது என்பது மிகவும் கடினம்.
மாற்றம் தவிர்க்க முடியாதது என்று அவர் சொல்வது பாஜக.,விலும் அவர் நிலையாக இருக்க மாட்டார் என்பதையே காட்டுகிறது. இந்த குணத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். பிற்காலத்தில் குஷ்பு தன் தவறை எண்ணி வருத்தப் படுவார்.
குஷ்பூ காங்கிரஸில் இருந்து சென்றதால் எங்கள் கட்சிக்கு இழப்பு எதுவுமில்லை. அவர் இங்கேயே தாமரை இலை தண்ணீரைப் போலத் தான் இருந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் அவரை ஒரு நடிகையாகத்தான் பார்த்தார்கள். அரசியல் கட்சித் தலைவராக அவரை அவரை பார்த்ததில்லை.
பாஜக., குஷ்பூவை விரும்பிக் கூப்பிடவில்லை. அப்படிக் கூப்பிட குஷ்பு ஒன்றும் முக்கியமான நபர் இல்லை! அவர், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். அதிமுக.,வுடன் பேரம் படியவில்லை. எனவே அவர் பாஜக.,வில் சேர்ந்துள்ளார்” என்றார் கே.எஸ். அழகிரி!