திருவண்ணாமலை: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வருவதற்கு முன்பு தீபத் திருவிழா கொடியேற்றிய கோவில் இணை ஆணையர் மற்றும் சிவாச்சாரியார்களை அதிமுக நகர செயலாளர் வசைபாடியதுடன் மிரட்டவும் செய்தார்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் நிர்வாகம் சார்பில் இன்று காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கொடி ஏற்றப்படும் என்று நேரம் குறிக்கப் பட்டிருந்தது.
இதற்காக, கோவில் முன்புறம் உள்ள 64 அடி உயரம் கொண்ட கொடிமரத்தில் கொடி ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்றன. இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 5.30 மணி அளவில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மை உள்பட பஞ்சமூர்த்திகளும் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
சரியாக 5.50 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாமதமாக வந்து சேர்ந்தார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அவருடன் அதிமுக நிர்வாகிகளும் வந்தனர்.
இந்நிலையில் அதிமுக நகரச் செயலாளர் செல்வம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வருவதற்கு முன்பாக எப்படி திருவிழா கொடியை ஏற்றலாம் என்று சிவாச்சாரியார் மற்றும் கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்டோரை கடுமையாகத் திட்டி, அவர்களை மிரட்டினார். அவரை உடன் வந்த எவரும் தடுத்து நிறுத்தி, அமைச்சருக்காக கொடியேற்று வைபவம் தள்ளிப் போகப் பட வேண்டுமா என்று கேட்டதாகத் தெரியவில்லை.
இது என்ன அதிமுக., கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி என்று அங்கே சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கேள்வி எழுப்பினர். அதிமுக.,வினரின் இந்தச் செய்கை அங்கிருந்தோரை முகம் சுளிக்க வைத்தது.