பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, தி.மு.க., ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்படும் எனக் கூறி தேர்தல் பிரசாரக் கூட்டத்தை திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினத்தை அடுத்த பி.ஆர்.புரத்தில் ‘உங்கள் பகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்னர் நடந்தது. இதில் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் அடங்கிய வடக்கு பொய்கை நல்லூரைச் சேர்ந்த வசந்தி என்ற பெண்மணியும் பங்கேற்று மனு ஒன்றை அளித்தார்.
அவள் அளித்துள்ள மனு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த மனுவில் வசந்தி கூறியிருப்பதாவது:
ஐயா… கீழையூர் திமுக., ஒன்றிய செயலரும், வேளாங்கண்ணி முன்னாள் பேரூராட்சி தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான வேளாங்கண்ணியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்து விட்டார்.
போலீசில் புகார் அளித்தும் தனக்குள்ள செல்வாக்கால் எடிசன் தப்பி வருகிறார். எடிசன் மீது நடவடிக்கை எடுப்பதோடு எங்கள் நிலத்தை மீட்டுத் தர வேண்டும்… என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
வசந்தியின் மகன் சந்தோஷ் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, எங்கள் குடும்ப சொத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து, தாமஸ் ஆல்வா எடிசன் ஆக்கிரமித் துள்ளார். அரசியல் செல்வாக்கு காரணமாக சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பி வருகிறார்.
எனவே அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைவரிடமே நேரடியாக மனு கொடுக்கச் சென்றோம். அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுவை போடுங்கள்; தலைவர் மைக்கில் கூப்பிடுவார். அப்போது குறைகளை கூறலாம் என்றனர். ஆனால் எங்களை மைக்கில் அழைக்கவில்லை. இதனால், ஏமாற்றத்துடன் திரும்பி விட்டோம்… என்று அவர் கூறினார்.
இதுதான் பெரும் ஆச்சரியம். திமுக ஆட்கள் நிலத்தை அபகரித்தார்கள் என்று திமுக தலைவரிடம் கூற முயன்றும், முடியாமல் நிலத்தை, சொத்தை இழந்தும் ஸ்டாலினை தலைவர் என்கிறார்.