கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் அடுத்த சில வாரங்களுக்கு எந்த மார்பக சோதனையும் செய்யவேண்டாம் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சில பெண்கள், மார்பகங்களில் வீங்கிய கட்டிகள் உருவாகி வருவதாக அச்சத்தில் மருத்துவர்களை நாடிவருகினற்னர்.
இந்நிலையில், கோவிட் -19 தடுப்பூசிகள் பெரும்பாலும் நிணநீர் மண்டலங்களில் (Lymph Nodes) வீக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அல்ட்ராசவுண்ட் மற்றும் மேமோகிராம் மார்பக புற்றுநோய் சோதனை திரைகளில் இவை கண்டறியப்படுகின்றன.
பல பெண்கள் தடுப்பூசி போட்டதைத் தொடர்ந்து மேமோகிராம் சோதனை செயததில் மார்பகக் கட்டிகள் இருப்பதைக் கண்டு, அது மார்பக புற்றுநோயைப் பற்றிய ‘தேவையற்ற’ அச்சங்களை எழுப்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், பெண்கள் கோவிட் -19 தடுப்பூசி பெற்ற பிறகு 4 வாரங்களுக்கு மேமோகிராம் செய்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், இவ்வாறு வரும் தடுப்பூசி போடப்பட்ட பெண்களுக்கு உடனடியாக பயாப்ஸி எடுக்க வேண்டாம் என்று நிபுணர்கள் மருத்துவர்களை வலியுறுத்துகின்றனர்.
பொதுவாக காய்ச்சல், பெரியம்மைக்கான தடுப்பூசிகளும் நிணநீர் மண்டலங்களை பெரிதாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்றும், இது செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி செயல்படுவதற்கான அறிகுறி என்றும் இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.