மத்திய பிரதேசத்தின் மாண்ட்சூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலைய குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக கழிவறை குழாயுடன் இணைத்த குற்றத்திற்காக ரயில் நிலைய மாஸ்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவுட்சோர்ஸ் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் குடிநீர் அடங்கிய தொட்டியில் கழிப்பறை குழாய்யை இணைத்ததை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்ததாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த மார்ச் 1ம் தேதி ரயில்வேயின் கோட்டா பிரிவின் கீழ் வரும் கரோத் நிலையத்தில் நடந்தது என்று மூத்த பிரதேச வணிக மேலாளர் அஜய் குமார் பால் கூறியுள்ளார்.
இது குறித்து பால் மேலும் தெரிவித்தாவது, “ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி குடிநீர் தொட்டியில் ஒரு கழிப்பறை குழாய் இணைத்துள்ளார்
இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, குடிநீர் தொட்டியில் இருந்த நீரை வெளியேற்றி, தொட்டியை நன்கு சுத்தம் செய்து, பிறகு குடிநீரின் திறன் சோதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டேஷன் மாஸ்டர் சவுத்மால் மீனா இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், துப்புரவு பணியாளர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்’ என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகிய பிறகே ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து மேற்கு மத்திய ரயில்வே அலுவலகம் கடந்த மார்ச் 5ம் தேதி இதுதொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தது.
மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலைமைகளுக்கிடையே இது போன்ற சம்பவம் மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.