உலக மனிதநேய தினம்
– கட்டுரை: கமலா முரளி
”மனிதம் இருக்கிறதா ? நேயம் என்றால் என்ன ?” போன்ற கேள்விகளுக்கு இடையில் உலகம் ஜீவித்துக் கொண்டிருக்கும் நாட்கள் இது!
அரசியல் லாபங்கள், அதிகார ஆசை, மத இன உணர்வுகளின் தீவிரச் செயல்பாடுகள், காழ்ப்புணர்ச்சி, சுயநலம் போன்ற காரணங்களால், மனித வாழ்வு ரணமாக ஆகியிருக்கிறது.
தனிமனித நிம்மதியும், பொது அமைதியும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இச்சூழலில், ”உலக மனித நேய தினம்” அனுசரிக்கப்படுவது சாலச் சிறந்தது.
உலக மனித நேய தினம் ஆகஸ்ட் 19ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
மனிதாபிமான தொண்டுகளில் ஈடுபட்டு, அயராது உழைக்கும், இத்தகைய பணிகளில் தங்கள் இன்னுயிரையும் துறக்கும் மனித நேய தொண்டர்களை கௌரவிக்கும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
போர்கள், உள்நாட்டுக் கலவரங்கள், பேரிடர்கள், நோய், பஞ்சம், வறுமை காரணங்களால் இன்னலுறும் வறிய மக்களின் நிலையும், அவர்களுக்கான சேவைகளை வழங்குதல் பற்றியும் உலக மனிதநேய தினத்தில் அனைவரின் கவனத்துக்குக் கொண்டு வரப்படுகிறது.
உலக மனிதநேய தினம் துவங்கிய வரலாறு
பிரேசில் நாட்டைச் சேர்ந்த சேர்சியொ வியரா டி மெல்லோ , கிட்டத்தட்ட முப்பதேழு வருடங்கள் ஐ.நா. சபையின் மனித நேயப் பணிகளில் தொண்டாற்றியவர். மிகச் கடினமான போர் சூழல்களில் சிக்கித் தவிக்கும் சாதாரண குடிமக்கள் படும் வேதனைகளை வெளிக் கொண்டு வந்தவர். அவர்களுக்கான நிவாரணங்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர்.
2003 ஆம் ஆண்டு,ஆகஸ்ட் மாதம் 19ம் நாள், பாக்தாத் நகரில் வெடித்த குண்டில், மனித நேயப் பணிகளில் ஈடுபட்டிருந்த சேர்சியா வியரா டி மெல்லோ மற்றும் அக்குழுவில் மேலும் 20 பேரும் உயிரிழந்தனர். அங்கே செயல்பட்டு வந்த ஐ.நா. உதவித் தூதுக் குழுவைக் குறி வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதப்பட்டது.
டி மெல்லோ அவர்களின் நண்பர்களும் குடும்பத்தினரும் 2006 ஆம் ஆண்டு சேர்சியொ வியரா டி மெல்லோ ஃபௌண்டேஷனைத் துவங்கினர். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ம் நாள் மனித நேய தினமாக அனுசரித்து, சொற்பொழிவுகள், மனிதநேயத் தொண்டுப்பணிகளின் தேவை, களநிலவரங்கள், மனிதநேயப் பணியில் ஈடுபடும் தொண்டர்களைக் கௌரவித்தல் முதலியவற்றை டி மெல்லோ ஃபௌண்டேஷன் செய்து வந்தது.
பிரன்ஸ்,ஸ்விட்ஸ்ர்லாந்து, ஜப்பான் மற்றும் பிரேசில் போன்ற உறுப்பு நாடுகளின் முன்னெடுப்புகளாலும், ஸ்வீடன் நாட்டின் முன்மொழிதலுடன் ஐ.நா வின் அவசர கால உதவிகளை ஒருமுகப்படுத்துதலையும், மனித நேயப்பணிகளில் தொண்டாற்றுவோரை கௌரவிக்கும் வகையில், ஐ.நா.பொது சபை, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ம் நாள் உலக மனித நேய தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது.
உலக மனிதநேய தினம் 2021 கருப்பொருள்
காலநிலை மற்றும் பருவநிலை மாறுபாடுகளால், நலிந்த மக்கள் எதிர்கொள்ளப் போகும் இன்னல்களும், உலகம் எதிர் கொள்ளும் சவாலும் அதற்கான திட்டங்களும் தான் இந்த வருடத்தின் கருப்பொருளாக இருக்கிறது.
காலநிலை மாறுதல் ஒரு அவசரநிலை இடர்பாடாக மாறும் அபாயத்தில் உள்ளது. தற்போதுள்ள அவசரநிலை உதவிக்குழுக்களால் சமாளிக்க இயலாத அளவுக்கு, இன்னல்களை உலகம் சந்திக்கவிருக்கிறது. அதிலும், குறிப்பாக, நலிவடைந்த மக்கள் மிகவும் அவதியுறுவர்.
உலக நாடுகள், மனித நேய தினமான இன்று காலநிலை மாற்ற அவசரநிலையை உலக நாடுகள் உணர்ந்து, அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் முதலுதவி நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என ஐ.நா.சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலக அளவிலான “ தி ஹூயுமன்ரேஸ்” ( #theHumanRace)
மனிதநேய தினத்தை ஒட்டி, ஒவ்வொருவரும் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான தினங்களில் ஓடுதல், நீந்துதல், பயணித்தல், நடத்தல் போன்ற ஏதோ ஒரு செயலை 100 நிமிடங்கள் ( எல்லா நாட்களுக்கும் மொத்தமாக) செய்து தங்கள் பங்களிப்பையும், உலகின் உதவி தேவைப்படும் நலிந்தோருக்கான ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது இந்த ஆண்டின் மனித நேய தின நிகழ்வு ஆகும்.
வாடிய பயிர் கண்டு….
”வாடிய பயிர் கண்டபோதெல்லாம் வாடினேன்” எனப் பாடிய வள்ளலார் பிறந்த தேசமிது. பிற மனிதர்கள் வாட நாம் வாழலாமோ?
ஒற்றுமையும், அன்பும் ,ஈகையும் நம் அடையாளங்கள் ஆகட்டும்!நம் சிறு சிறு செயலிலும், சொல்லிலும், அசைவிலும் கூட மனித நேயம் மலரச் செய்வோம் !