ஶ்ரீரங்கம் கோயிலில் யானைகள் குளிப்பதற்காக கட்டப்பட்ட புதிய நீச்சல் குளம் பயன்பாட்டிற்கு வந்ததை அடுத்து, ஆண்டாள், லட்சுமி யானைகள் குளத்தில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தன.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் சிறப்புக்குரியது. இந்த கோவிலில் அரங்கன் வழிபாட்டிற்காக ஆண்டாள், லட்சுமி என்ற 2 யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த யானைகள் குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் கோயிலுக்கு சொந்தமான “உடையவர் தோப்பில்” 56 அடி நீளம், 56 அடி அகலம் மற்றும் 6.5 அடி உயரத்தில் சுமார் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீச்சல் குளம் கட்டும்பணி நடைபெற்று வந்தது.
பணிகள் நிறைவடைந்தை அடுத்து, இந்த குளத்திற்கு ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்தார். பின்னர், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய இரு யானைகளும் முதன் முறையாக புதிய நீச்சல் குளத்தில் இறக்கி குளிக்க வைத்து பார்க்கப்பட்டது.
அப்போது, யானைகள் லட்சுமியும், ஆண்டாளும் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தன.
இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கோயில் மேலாளர் உமா உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.