சிறந்த சேவைகளை வழங்கி கொண்டிருக்கும் அரசு வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷமான செய்தியை வெளியிட்டுள்ளது.
எந்தவிதமான சேமிப்பு திட்டமாக இருந்தாலும் சரி, மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பணத்தை முதலீடு செய்வது வட்டிக்காக தான். முதலீடு செய்யும் பணத்துக்கு மாத மாதம் வட்டியும் கிடைக்கும் அதே சமயம் டெபாசிட் செய்யும் பணமும் திரும்ப கிடைக்க வேண்டும்.
இதை மனதில் கொண்டு தான் பிக்சட் டெபாசிட், டைம் டெபாசிட், மாதாந்திர வருமான சேமிப்பு திட்டம் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்கின்றனர்.
அது வங்கியாக இருந்தாலும் சரி, போஸ்ட் ஆபீஸ் சேமிப்பாக இருந்தாலும் சரி. அந்த வகையில் பிக்சட் டெபாசிட் திட்டம் பலரின் தேர்வாக இருக்கிறது.
இந்தத் திட்டத்தில், FD கணக்கை உருவாக்கும் போது ஒருமுறை நிலையான தொகை டெபாசிட் செய்யப்படுகிறது. இறுதியில், தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திற்கான வட்டித் தொகை அசல் தொகையுடன் கணக்கிடப்பட்டு மொத்தத் தொகை ஒட்டுமொத்தமாக செலுத்தப்படும்.
தனியார் வங்கிகள், அரசு வங்கிகள், நிதி நிறுவனங்கள், போஸ்ட் ஆஃபீஸ் ஆகியவற்றில் பல வகையான பிக்சட் டெபாசிட் திட்டங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவர்கள் வெவ்வேறு வகையான வட்டி விகிதங்களை வாரி வழங்குகின்றன.
சமீபத்தில் கூட கனரா வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஸ்டே பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆகியவை தங்கள் வங்கியில் செயல்படும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டி விகிதங்களை உயர்த்தி இருந்தன. இது வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்து இருந்தது.
அந்த வரிசையில் தற்போது பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இணைந்துள்ளது. நீண்ட கால பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் மூலம்
3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 5.45 சதவீதமாக உயருகிறது.
அதே போல் அடிப்படை விகிதம் சதவீதத்தையும் 9.10 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாகக் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி அடிப்படை விகிதத்தில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் இனி குறைந்த வட்டி செலுத்தலாம். இந்த புதிய மாற்றம் மார்ச் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.