கோயம்புத்தூர் -ஈரோடு இடையே தொழில் நிமித்தம் மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக ஏராளமானோர் ரயிலை நாடுகின்றனர்.
அவர்களின் வசதிக்காக கோவை -ஈரோடு -கோவை இடையே தினம்தோறும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் பொதுமக்கள் தினம்தோறும் பயணிக்கின்றனர். இருந்தாலும் இந்த ரயில் சிங்காநல்லூர் ரயில்வே நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது.
அதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். அவர்கள் இருகூர் ரயில்வே நிலையம் சென்ற ரயிலில் ஏற வேண்டிய சூழலில் இருந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த ரயில்களை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என்ற ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் கோவை -ஈரோடு-கோவை இடையேயான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனிவரும் நாட்களில் சிங்காநல்லூரில் நின்று செல்லும் என அதிரடியாக அறிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் இந்த ரயில்கள் ஒரு நிமிடம் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.