தமிழகத்தில் 10,11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக, 10 மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியும், அடுத்த வாரத்தில் 11-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 30-ம் தேதியும் முடிவடைந்தது. பிளஸ் 1 பொதுத்தேர்வு 31ல் நிறைவடைந்தது.
இதன்பின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 1ம் தேதி முதல் தொடங்கும் என்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
17 லட்சம் மாணவர்கள் எழுதிய 1.87 கோடி விடைத்தாள்களை திருத்தும் பணி வரும் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்பணியில் 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒரு அறையில் 1 முதன்மைத் தேர்வாளர், 1 கூர்ந்தாய்வு அலுவலர், 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 8 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் பாட விடைத்தாள்கள் காலை 15, மதியம் 15 என ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 30 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த வேண்டும். அதேபோல், இயற்பியல், வேதியியல், கணிதம் பாட விடைத்தாள்களை காலை 12, மதியம் 12 என ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல இடங்களில் போதிய ஆசிரியர்கள் வராத காரணத்தால், விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் போதிய வசதி இல்லை என்று குற்றசாட்டி சில இடங்களில் ஆசிரியர்கள் பணியை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.
தங்களுக்கு விருப்பமான மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்தியும் சில ஆசிரியர்கள் புறக்கணித்து இருந்தனர்.
‘வழக்கமாக பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில் தான் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆனால் இந்தாண்டு வழக்கமான முறையில் மாற்றம் செய்ததால் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து வெகுதொலைவில் உள்ள மையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.
ஏற்கெனவே இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வேறு வழியின்றி பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை நாங்கள் புறக்கணிப்பு செய்துள்ளோம்.’ என்று போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்
தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு புதிய பங்களிப்பு திட்டம் ரத்து செய்யப்படவில்லை. அகவிலைப்படி உயா்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதியத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை நிறைவேற்றியதாக அரசு தெரிவித்து வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்து ஆசிரியா் சங்க கூட்டமைப்புகளின் சாா்பில் வியாழக்கிழமை விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா் கருப்பு பட்டை அணிந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் தவறாமல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒதுக்கிய ஆசிரியர்களை விடுவிக்க தலைமை ஆசிரியர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வரும் 23-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பயிற்சிக்குப் பின்னர் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
மேலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். வரும் 14-ம் தேதி மாணவர்கள் சேர்க்கை பேரணியை ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.
கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது