மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று பேசி வருகின்றனர்.
பாஜக.,வுக்கு எதிரான மெகா கூட்டணி என்ற பெயரில், மாநிலக் கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைத்து பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் மம்தா பானர்ஜி!
தானே அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று எண்ணிக் கொண்டு, அறிவிக்கப் படாத தலைமையை காங்கிரஸுக்குக் காட்டுவதற்காக மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சிக்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் தோள் கொடுத்துள்ளனர். இது ராகுல் காந்திக்கு ஏற்பட்ட பின்னடைவு என்பதும், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த தமிழகத்தின் ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்ட சவுக்கடி என்றும் கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு தனக்கு ஒரு கனவை வளர்த்துக் கொண்டு காங்கிரஸ் கூட்டணியில் இடம் பிடித்தார். பிரதமர் கனவில் தானே முன் முயற்சி எடுத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கவே ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்தார். ஆனால், ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் கூறியதால், ஆப்பசைத்த குரங்காக ஆகிப் போனது அவரது நிலை.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, நல்லாட்சி தருவதாக கூறிய பாஜக மக்களை ஏமாற்றிவிட்டதாகப் பேசினார். நாடு முழுவதும் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும், ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பெரிய ஊழலை பாஜக செய்துள்ளதாகவும் கூறிய அவர், பேசும் பிரதமரை விட நாட்டை நன்றாக நிர்வகிக்கும் பிரதமர் தான் தேவை என்று தன்னை மனதில் நினைத்துக் கொண்டு அவ்வாறே தன் ஆசையை வெளிப்படுத்தினார்.
அடுத்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மோடியும், அமித்ஷாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை ஒட்டுமொத்தமாக அழித்து விடுவார்கள் என குற்றம் சாட்டினார். ‘‘பாஜக ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாடு கண்டிராத மிகமோசமான ஆட்சி தற்போது நடைபெறுகிறது. இந்த அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். மோடியும், அமித்ஷாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டையே அழித்து விடுவார்கள். ஹிட்லர் எதை செய்தாரோ அதையே செய்வார்கள், அரசியல் சட்டம் ஒழித்துக் கட்டுவார்கள், தேர்தலை நிறுத்தி விடுவார்கள். எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். ஒட்டு மொத்தமாக நாட்டையே அழித்து விடுவார்கள்’’ எனக் கூறினார் அரவிந்த் கேஜ்ரிவால்.
பாஜக தோல்வியை இந்த மெகா கூட்டணி உறுதி செய்யும் என்றார் குஜராத்தின் ஜிக்னேஷ் மேவானி!
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்காக, இப்போதே தேசிய, மாநில அளவில் கூட்டணிகளை அமைக்க பல்வேறு கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். உபி.,யில் மட்டும் அதிக தொகுதிகளில் வென்றுவிட்டால், தங்களுக்கும் பிரதமர் வாய்ப்பு கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. இதனால் வேறு வழியின்றி, உபி.,யின் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.