தமிழ்நாட்டில் கடந்த 4 வருடங்களுக்கு முன் ஒரு சினிமாப் படம் வந்தது. படத்தின் பெயர் சதுரங்க வேட்டை. அந்தப் படத்தில் கதாநாயகன் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க பல உத்திகளைக் கையாளுவான்.
அது போலத் தான் சாரதா நிதிக் குழுமம் மக்களை ஏமாற்ற பல உத்திகளைக் கையாண்டு நிதி வசூல் செய்து 42 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
இதை ஆரம்பித்து வைத்தவர், நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம் என்று மார்தட்டிக் கூவும் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்த நக்ஸலைட்டு இயக்கத்தில் பணியாற்றிய சுதிப்தோ சென்! இவர்தான் மேற்கு வங்க மக்களை ஏமாற்ற மாஸ்டர் பிளான் செய்து இன்றைக்கு அந்த நிறுவனம் 16 ஆயிரம் பணியாளர்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக வளர்த்துள்ளார்.
தொடக்க காலக் காலகட்டத்தில் மக்களுக்கு வட்டிக்கு பணம் தருவது. எவ்வளவு பணம் தருவோமோ அதற்கு இரட்டிப்பு பணம். வார வட்டி , நாள் வட்டி என பல கவர்ச்சி திட்டங்கள் மக்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தில் அதிக ஏஜெண்ட்களை திரட்ட புதிய ஸ்கீம் அறிவிக்கப்பட்டது. அதாவது வட்டி பணத்தில் 25% முதல் 50 % வரை கமிஷன் தரப்படும் என அறிவித்தது.
இதன் மூலம் ஏராளமான ஏஜெண்ட்களை திரட்டினர். அவர்கள் மக்களிடம் பண வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். சட்ட விதிமுறைகளை மீறி 200 துணை நிறுவனங்கள் அமைத்து வசூல் செய்து மக்களை ஏமாற்றி வந்தனர்.
மேற்கு வங்கத்தில் கால்பந்து விளையாட்டில் இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் என்பதால் சாரதா நிதி நிறுவனம் அதில் முதலீடு செய்ய முற்பட்டது. இதற்காக பிரபலமான மோகன் பகான் அணியில் முதலீடு செய்தது. மேலும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,க்களான சதாப்தி ராய் மற்றும் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.
மேலும் நுட்பமாகக் கவனித்தால்… விவேகானந்தர், ராமகிருஷ்ணர், சாரதா தேவி ஆகியோர் மீது வங்க மக்களுக்கு ஈர்ப்பு அதிகம் என்பதால், அந்தப் பெயரை வைத்தே வங்க மக்களை பங்கம் செய்ய ஆரம்பித்தனர். அதனால்தான் நிறுவனத்தின் பெயரையும் சாரதா சிட் பண்ட் என்று சூட்டினர். இதன் மூலம், ஆன்மிக சாதனையில் வங்கத்து மக்களின் முன்னோடியாகவும் அடையாளமாகவும் திகழ்ந்து, மக்களின் நெறி சார்ந்த வாழ்க்கைக்கு காரணமாக இருந்த சாரதா தேவியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கத் தொடங்கினர்.
முதலில் கடன் பத்திரங்கள், டெபாசிட்டுகள் என நிதி வசூல் செய்தது சாரதா நிறுவனம்! இந்திய நிதி அமைப்புகள் சட்டப்படி 50 க்கும் மேற்பட்ட வர்களிடம் இருந்து பணம் வசூல் செய்தால் அதற்கு ஆடிட்டிங் சமர்பிக்க வேண்டும் . எனவே மத்திய அரசின் கண்காணிப்பு அமைப்பான செபி இந்நிறுவனம் சட்ட விரோமாக நிதி வசூலில் ஈடுபடுகிறது என அறிவித்தது. தொடர்ந்து, இந் நிறுவனத்தை 2009ல் தடுக்க முயற்சித்தது.
இதனால் தனது நிறுவனத்தின் திசையை மாநில அரசின் துறைகளில் திருப்பினார்கள்! ஏலச் சீட்டு, கட்டுமானத்துறை, ரியல் எஸ்டேட் , மோட்டார் சைக்கிள், சுற்றுலா சேவை என திட்டங்களை அறிவித்து நிதி வசூல் செய்து வந்தனர்.
2011 ல் ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜி அரசிடம் இந்நிறுவனம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொண்டது. இதனால் சாரதா நிதி நிறுவனம் தனது கிளையை ஜார்கண்ட், அசாம் , சட்டீஸ்கர் என அருகில் உள்ள மாநிலங்களில் விரிவுபடுத்தியது.
17 லட்சம் பேரிடம் சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து அண்டை நாடுகளில் முதலீடு செய்தது. குறிப்பாக சிங்கப்பூர் மலேசிய துபை நாடுகளில்!
ஆனால், இந்நிறுவனம் 2013 இல் கடன்களால் திவாலானது என அறிவித்தது. இதனால் மக்கள் வெகுண்டு எழுந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலான மக்கள் ஏழை எளியவர்கள்.
இந்நிறுவனத்தை தொடங்கியவர்களான சுதிப்தோ சென் செயலாளர் தேப்ஜானி முகர்ஜி திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குணால் ராய் , அமைச்சர் மதன் மித்ரா விளையாட்டு வீரர் தேபாப்ரதா டி எஸ் பி ராஜித் மஜூம்தர்.. என இவர்கள் அனைவரின் மீதும் நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில்தான் 2013 ஏப்.22இல் ஓய்வு பெற்ற நீதிபதி ஷியம்லால் குமார் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா பானர்ஜி! பாதிக்கப்பட்டவர்கள் ஏழை எளிய மக்கள் என்பதால் அரசு தரப்பில் 500 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார் மம்தா பானர்ஜி.
இதற்காக புகையிலை பொருட்களின் வரியை 10 % அளவுக்கு உயர்த்தினார். இந்தச் செயல் பல கேள்விகளை எழுப்பியது. ஒரு தனியார் நிறுவனம் செய்த மோசடிக்கு அரசின் பணத்தை எப்படி நிவாரணமாக தரமுடியும் என்று பல அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை வீசினார்கள்.
இதன் பின் தான் 2014இல் வழக்கு விசாரணை CBI க்கு மாற்றப்பட்டது. அதுவும் உச்ச நீதிமன்றம் முன்வந்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. வெகு நாட்களாக சிபிஐயும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால், விசாரணைக்கு எவரும் சரியாக ஒத்துழைக்கவில்லை. குறிப்பாக, கொல்கத்தா நகர காவல் ஆணையர்! மம்தா பானர்ஜியின் கையாளாகப் பணி செய்து, பல ஆதாரங்களை அழித்தது. இதனால் இப்போது சிபிஐ.,யை எதிர்ப்பது போல் மோடி மீதான கணைகளை அரசியல் ரீதியாக வீசுகிறார் மம்தா!
“உண்மையில் மம்தா ஒரு வசூல் ராணிதான்! அவரின் தம்பி போல் செயல்பட்டது போலீஸ் சர்வீஸில் உள்ளவர்கள்!
- பிருத்விராஜன் @ பாரதத்தமிழன், ( இதழியல் துறை மாணவர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி)