மீண்டும் செல்ஃபி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் நடிகர் சிவகுமார்.
இந்த முறை ஒரு திருமண வரவேற்புக்குச் சென்றிருந்த நடிகர் சிவகுமார் சிரித்த முகத்துடன் உள்ளே வருகிறார். அப்போது ஒருவர் தனது செல்போனில் உடன் நடந்து கொண்டே செல்பி எடுக்கிறார். ஆனால் அதை கவனித்துவிட்டும் கவனிக்காதது போல், எங்கோ திரும்பிக் கொண்டு, வீடியோ கேமராவுக்கு சிரித்தபடியே போஸ் கொடுத்துக் கொண்டே உள்ளே வரும் சிவகுமார், கண்ணிமைக்கும் நொடியில் பின்னால் கையைத் தட்டிவிட்டுவிட்டு, அப்படியே உள்ளே நகருகிறார்.
அப்போது அருகில் இருக்கும் நபர், செல்பி எடுத்தவரைப் பார்த்து, ஏன்யா இப்படியெல்லா.. என்பது போல் கேள்விக்கணை தொடுக்கிறார்.
இந்த வீடியோ க்ளிப்பிங் இப்போது வைரலாகி வருகிறது. ஏற்கெனவே மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் வந்த போது செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டு, பின்னர் அது சர்ச்சை ஆனதும் வேறு புதிய செல்போனை வாங்கிக் கொடுத்தார் சிவகுமார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் இதே போல் நடந்துள்ளது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.