கும்பகோணத்தை அடுத்த திருப்புவனம் பகுதியில், மதமாற்றம் மற்றும் மத பிரசாரத்தைத் தடுத்து இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமலிங்கம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார்.
அவரது படுகொலை நிகழ்ந்து ஒரு வாரம் கழித்து இன்று அவரது படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், நியாயம் வழங்கக் கோரியும், கும்பகோணம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் பட்டது.
ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து, தலைநகர் தில்லியில் கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களும் சில இடங்களில் சிரத்தாஞ்சலியும், மௌன அஞ்சலியும் செலுத்தப் பட்டது. ஹிந்து உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, படுகொலையான ராமலிங்கத்தின் ஆன்மா அமைதி பெற வேண்டும், நற்கதி அடைய வேண்டும் என்று கோரி, வட இந்தியாவின் சில இடங்களில் கண்டனக் கூட்டங்களும் மௌன அஞ்சலியும் செலுத்த பட்டன.
இந்நிலையில் இன்று, தமிழகத்தில் ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து தஞ்சை, கும்பகோணம், திருப்புவனம், திருவிடை மருதூர், ஆடுதுறை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கடை அடைப்பு போராட்டத்துக்கு உள்ளூர் வியாபாரிகள், இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன
இதனை ஏற்று, இன்று காலை முதல் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனிடையே, இந்தக் கடையடைப்பில் கலந்து கொள்ளாத கடைகளைக் கணக்கெடுத்து, இனி அவர்களது கடைகளில் பொருள்கள் வாங்குவதை தவிர்ப்போம் என திருபுவனத்தில் பொதுமக்கள் பரவலாகக் கூறினர். இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்காத கடைகளில் வியாபாரம் செய்ய மாட்டோம். இந்துக் கடைகளில் மட்டுமே பொருள்களை வாங்குவோம் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினர்.