என்டிடிவி.,யில் பணிபுரியும் நிதி சேதி என்ற துணை செய்தி ஆசிரியர் நேற்று பதிவு செய்த ஒரு டிவீட் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. இத்தகையவர்களைத்தான் எண்டிடிவி தனது நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்து, இத்தகைய பயிற்சியை அளித்துள்ளது என்று கடுமையாகத் திட்டித் தீர்த்து வருகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!
காஷ்மீரில் துணை ராணுவப் படையினர் 40 பேர் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதியால் தற்கொலைப் படைத் தாக்குதலில் வீர் மரணம் அடைந்த நிலையில், அது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார் நிதி சேதி. இவர் என்டிடிவி.,யில் துணை செய்தி ஆசிரியராகப் பணி செய்பவர். தனது பேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்து, ராணுவ வீரர்களின் மரணத்தைக் கொச்சைப் படுத்தியிருந்தார்.
இது குறித்த கண்டனங்கள் வலுத்த நிலையில், என்.டிடிவி நிர்வாகம் அவரை இரு வாரங்களுக்கு பணியிடை நீக்கம் செய்தது. நெருக்கடி முற்றிய நிலையில், இதற்காக தனது வருத்தங்களைப் பதிவு செய்தது.
ஆனால் இந்தச் சம்பவத்தை தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டவர்கள், இன்னும் இருவாரம் கழித்து, இந்த நிறுவனம் அவருக்கு பணி உயர்வு கொடுத்து கூடுதல் சம்பளத்தையும் வழங்கும். ஏனென்றால் என்.டிடிவியின் தரம் அப்படி! இதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை. இந்த நிறுவனத்தின் ஊடகவியலாளர் தயாரிப்பும், பயிற்சியும், பணிபுரியத் தேர்ந்தெடுக்கும் தகுதியும் இது போன்ற தேச விரோத செயல்பாடுகளின் தரத்தை வைத்துத்தான்!
இந்த நிறுவனம் இந்தியாவின் எதிரிகளால் நிதி உதவி செய்யப்படும் நிறுவனம். அது அப்படித்தான் இருக்கும் …. என்று கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.