புது தில்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ மொஹம்மத் இஸ்லாமிய மதவெறி பயங்கரவாத அமைப்பில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படை வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பஞ்சாம் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, ஒரு டிவி காமெடி ஷோவில் இருந்து நீக்கப் பட்டுள்ளார். இதற்கு மக்களின் கொந்தளிப்பும் எதிர்ப்புமே காரணம்.
ஹிந்தி டிவி சேனல் ஒன்றில், ‘தி கபில் சர்மா ஷோ’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தொகுப்பாளர் கபில் சர்மாவுடன் இணைந்து, பஞ்சாப் அமைச்சரும், காங்கிரசை சேர்ந்தவருமான சித்து இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
வெள்ளிக்கிழமை நேற்று, இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய சித்து, ஒரு சிலர் செய்த செயலுக்காக நீங்கள் ஒட்டுமொத்த நாட்டை குறை சொல்வீர்களா? தனி நபரை குற்றம் சாட்டுவீர்களா? இது கோழைத்தனமான தாக்குதல், இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன். வன்முறை எப்போதும் கண்டனத்துக்குரியதுதான்! இதனை யார் செய்தாலும், அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பலர், இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில், இந்த நிகழ்ச்சிக்கும் சித்துவுக்கும் கடும் கண்டனம் எழுந்தது! மேலும், இப்படி ஒரு தேசவிரோதக் கருத்தை தெரிவித்த சித்துவை நீக்க வேண்டும் என ஏராளமானோர் கூறினர். சித்து நீக்கப்படும் வரை நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்றனர் சிலர். இதனால் இந்த நிகழ்ச்சியில் சித்து கலந்து கொள்வதால் ஏற்படும் சாதகத்தை விட பாதகமே மோங்கியிருந்ததால், இந்த நிகழ்ச்சியிலிருந்து சித்துவை நீக்க சேனல் நிர்வாகம் முடிவு செய்தது. இதனை சித்துவிடம் தெரிவித்துவிட்டதாம்.
இருப்பினும் வழக்கம் போல், தமது கருத்து திரித்து கூறப்பட்டது என்றும், மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் சமாளித்துப் பார்த்தார் சித்து. ஆனால், எவரும் அவரது விளக்கத்தை ஏற்பதாக இல்லை! பயங்கரவாதத்துக்கு சாதி மதம் எல்லைகள் கிடையாது என்று கூறினேன் என சமாளித்துப் பார்க்கிறார்.! ஆனாலும் எவரும் அவரை நம்புவதாக இல்லை.