தூத்துக்குடி நிலவரம் சுவாரஸ்யமானதுதான்! இங்கே போட்டியிடுபவர்களுக்கு நடுவே சில வேற்றுமைகள் இருந்தாலும், முக்கியமாக பாஜக., வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், மற்றும் திமுக., வேட்பாளர் கனிமொழி ஆகியோருக்கு இடையேயான சில சுவாரஸ்யங்கள் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.
அப்படிப்பட்ட சுவாரஸ்யங்களின் தொகுப்பை நம் வாசகர் ஒருவர் கட்டுரைக்கான கருத்தாக இட்டிருந்தார். அவை…
இருவருமே இலக்கியவாதி மற்றும் பெரும் அரசியல் பிம்பங்களின் மகள்கள்
தந்தையின் நிழலில் இருவரும் வளர்ந்தனர், இருவருமே இலக்கிவாதிகள், இருவரின் பேச்சிலும் எழுத்திலுமே தந்தையரின் சாயல் நன்றாக தெரியும்
ஆனால் இருவருக்கும்தான் அரசியலில் எவ்வளவு வேறுபாடு?
கலைஞரால் வலிந்து திணிக்கபட்டு , அரசியலில் பாதுகாக்கபட்டு வளர்ந்தவர் கனிமொழி
வழி முதல் ராஜ்யசபா எம்பி வரை அவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வழங்கபட்டது, பெரும் சிரமம் என ஏதுமில்லை
அரசியல் அவருக்கு மல்லிகைபூ தூவிய மலர்ப்பாதை
கனிமொழி கலைஞரின் வடிவமாக கருதபட்டு வணங்கபட்ட காலங்கள் உண்டு
ஆனால் தமிழிசை அப்படி அல்ல, அவர் சுயம்பு காங்கிரசோடு அவர் ஒட்டியவரல்ல. வேலாயுதம் எனும் எம்.எல்.ஏவினை முதல் பாஜக உறுப்பினராக அந்த விளவங்கோடு தொகுதி அனுப்பிய காலத்திற்கு முன்பே அக்கா பாஜக கட்சி
பாஜக கொஞ்சமும் தேறாது என கருதபட்ட காலங்கள் அவை
தமிழகத்தில் இந்த கெஜ்ரிவால் கட்சி, மாயாவதி கட்சி, திரினாமுல் காங்கிரஸ் எல்லாம் ஒரு சில நபரோடு இருப்பது போல் அன்று பாஜகவும் இருந்தது
தமிழிசை ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற காலங்களும் உண்டு
ஆனால் போராடினார், சளைக்காமல் போராடினார்
மலர்பாதையில் நடந்து வருவது சிரமமே அல்ல கனிமொழி அப்படித்தான் வந்தார்
ஆனால் தமிழிசை நடந்த பாதை கடுமையானது, கற்களும் முட்களும் நிரம்பிய பாதை அது, பலநேரம் பாதையே தெரியாமல் திகைக்க்க வேண்டியதிருக்கும்
அதுபோக அவர்மேல் வீசபட்ட அவமான கற்களும், மிக மட்டமான விமர்சன கற்களும் ஏராளம்
கடம்பை வண்டுகளை விட அவை அவரை மோசமாக கொட்டின
தன் சோகங்களை எல்லாம் கொட்டி தீர்க்க, தனக்கு வழிகாட்டுங்கள் என அழுது சாய அவருக்கு தந்தை கட்சியில் இல்லை
தனயனும் இல்லை, தமையனுமில்லை
மாறாக போராடினார், கடுமையாக போராடினார், அதை எல்லாம் தாண்டித்தான் அவர் மாநில தலைவராக உயர்ந்தார்
கொஞ்சமும் சிக்கலே இல்லாமல் தந்தை என்ற ஒற்றை பெரும் பாதுகாப்பில் இளவரசி தோரணையில் வந்து நிற்பவர் கனிமொழி
தந்தையினை மீறி வேறு கானகம் புகுந்து கடைந்தேறி அனுபவமும் கல்லடியும் சொல்லடியும் பட்டு களத்திற்கு வந்திருப்பவர் தமிழிசை
தேர்தல் களத்தில் கவனிக்கபடுபவர் தமிழிசைதான், ஆச்சரியமாக நோக்கபடுகின்றார்
இருபெண்களையும் ஒப்பிட்டால் தமிழிசைக்கே பலத்த ஆதரவும் பரிதாபமும் மக்களிடம் உண்டு, ஆனால் அரசியல் அதற்கு அப்பாற்பட்டது
தமிழக யதார்த்தபடி கனிமொழி வெல்லலாம்
ஆனால் உண்மையான வெற்றி தமிழிசைக்கே, அவர் போராட்டமும் அவர் சுமந்த பாரமும் அப்படி
ஒருவிஷயம் நோக்க கூடியது
கனிமொழி இந்த தேர்தலுக்கு பின் இப்பக்கம் வருவாரா என்பது தெரியாது, கூடுமானவரை இருக்காது
நாளையே பெரும் சிக்கல் என்றால் அவர் கட்டம் கட்டபடலாம், அதிலிருந்து மீள்வது சிரமம்
முன்பு அவரின் காயங்களை எல்லாம் மிக கவனமாக மருந்திட்டு ஆற்றியவர் அவரின் தந்தை, மிகபெரிய அரண் அது
(ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞரின் அணுகுமுறையே கனிமொழியினை காத்தது, ஆதாரம் இல்லை என முணுமுணுத்தபடிதான் தீர்ப்பு சொன்னார் ஷைனி)
அதாவது வழிகாட்ட ஆளில்லா , பாதுகாக்க தந்தையில்லா கனிமொழி பலத்த எதிர்ப்புகளை சந்தித்து நிற்பது சிரமம்
ஆனால் தமிழிசைக்கு மிகபெரும் அனுபவமும் எல்லா சிக்கலை தாண்டி வரும் தைரியமும் இருக்கின்றது!
இன்று இல்லையேல் என்றாவது ஒருநாள் அவரின் போராட்டத்திற்கான பலன் கிடைத்தே தீரும்! பார்த்து பார்த்து வளர்க்கபடும் ரோஜா செடியினை விட, தானாக முளைத்து போராடி வரும் மரத்திற்கு வலு அதிகம்.! எந்த சூழலும் அதை பாதிக்காது, அது நிலைத்தே தீரும்!
- என்று ஒரு பகிர்வு நமக்கு அனுப்பப் பட்டது.
இதே நேரம், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதில், முதலில் தமிழிசை வேட்புமனுவும், பின்னர் கனிமொழியின் வேட்புமனுவும் ஏற்கப் படாமல் நிறுத்தி வைக்கப் பட்டு, பின்னர் பெருத்த விவாதங்களுக்கு இடையே ஏற்கப் பட்டது.