சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற விஷம் கக்கி வரும் கமல் நாக்கை அறுக்கத்தான் போகிறார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பள்ளப்பட்டியில் பிரசாரம் செய்தார் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன். அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து, அவன் பெயர் கோட்சே எனக் கூறினார். கமலின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனிடையே கமலின் பேச்சுக்கு தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசனுக்கு நாக்கில் சனி. இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள பகுதியில் சென்று இந்துதான் முதல் பயங்கரவாதி என்று பேசியிருக்கிறார். பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. தீவிரவாதியை தீவிரவாதி என்றே கூற வேண்டும். கமலின் நாக்கை அறுக்கத்தான் போகிறார்கள்.
யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக் கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மதத்தையும் புண்படுத்தும்படியாக பேசுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு கமல் கட்சியை தடை செய்ய வேண்டும்” என்று கூறினார்.