சென்னை: தன் மீது செருப்பு வீசப்பட்டதையும் காந்தியின் வரலாற்று நிகழ்வையும் சுட்டிக்காட்டி சென்னையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசிய போது, அந்த இன்னொரு செருப்பையும் கொடுங்க, காத்திருக்கிறேன் என்றார்.
பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் “ஒத்த செருப்பு” இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.பாக்கியராஜ், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன் ” எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். அதை நான் திரும்பத் திரும்ப படித்தேன். அதில், காந்தி ரயிலில் சென்று கொண்டிருந்தபோது அவரது ஒரு செருப்பு தவறி கீழே விழுந்துவிட்டது. உடனே அவர் மற்றொரு செருப்பை கழற்றி வீசி விட்டார்.
ஏன் என்று கேட்டதற்கு ஒரு செருப்பு யாருக்கும் பயன்படாது. அதனால் தான் இன்னொரு செருப்பையும் கழற்றி எறிந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.
நான் காந்தியின் ரசிகன். நான் சென்ற இடத்தில் என் மீது ஒரு செருப்பு வீசினர். இன்னொரு செருப்பும் என்னை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கிறேன். தற்போது ஒரு செருப்பு கிடைத்துவிட்டது. மற்றொரு செருப்பு விரைவில் கிடைக்கும். அதற்கான தகுதி எனக்கு உண்டு. செருப்பை போட்டவருக்கு தான் அவமானம்”. என்றார் கமல்ஹாசன்.
இந்நிலையில், அப்பகூட ஜோடியைத்தான் தேடுவே திருந்த மாட்டே…!? என்று நெட்டிசன்கள், கருத்து தெரிவித்து கிண்டல் செய்திருக்கின்றனர். மேலும், செருப்பை கமல் நோக்கி வீசாதீர்கள், அவை ஜோடியாகவே இருக்கும், ஒன்றைப் பிரிந்து மற்றொன்று வாழாது! அதன் மதிப்பைத் தெரியாத கமலுக்கு செருப்பு விநியோகம் செய்யாதீர்கள் என்று பேஸ்புக் உள்ளிட்ட சமூகத் தளங்களில் அட்வைஸ் வேறு!