வேறு மார்க்கம் ஊரின் மறுபுறத்தில் ஓடும் மாயாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். மாயாறு சாதாரண நாட்களில் பரிசலில் கடந்து செல்லலாம். ஆனால், தற்போது கனமழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால், மாயாற்றில் பரிசல் பயணம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் அங்குள்ள அள்ளிமாயார் கிராமத்தைச் சேர்ந்த நீலியம்மாள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து, அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் முயற்சியாக ஆம்புலன்ஸ் வழியாக சடலத்தை கல்லம்பாளையம் வரை கொண்டு வந்தனர்.
அடுத்தாக வழியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மாயாற்றை எப்படி கடப்பது என குழம்பிய நிலையில், வெகு நேர ஆலோசனையின் பின் நீலியம்மாளின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி மாயாற்றில் 3, 4 பேர் பிடித்துக் கொண்டு, நீச்சலடித்தபடியே எடுத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நவீனமயமாகி விட்ட காலகட்டத்திலும்,தொழில்நுட்ப வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் பெருகிவிட்ட இந்நிலையிலும் மரக்கட்டையில் சடலத்தை கட்டி, மலைவாழ் மக்கள் எடுத்துச் சென்ற சம்பவம் காண்பவர்களை கண்கலங்க வைத்தது.
எங்களுக்கு ஒரு பாலம் வேண்டும் என்று ரொம்ப காலமாகவே இந்த மக்கள் கேட்டு கொண்டு வருகின்றனர். அதில் இறந்துபோன நீலியம்மாளும் ஒருவர். குறிப்பிட்ட மலைவாழ் கிராமத்தினருக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.