ஜெயஸ்ரீ.எம்.சாரி, நாக்பூர்
‘எண்ணங்கள் வலிமையானது. நாம் எண்ணும் எண்ணங்களே நமக்குள் ஆட்கொள்ளும். இயற்கையோடு இயைந்த எண்ணங்கள் நம்மை பண்படுத்தும்’ – என்னும் பலவிதமான நம்பிக்கையூட்டும் சொற்றொடர்கள் நாம் அன்றாடம் கடந்து வருகிறோம்.
எங்கள் இல்லத்தின் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் அருமையான வயல்வெளிகள் இருக்கும். அங்கு பயிரப்படும் பயிர்களின் அன்றாட வளர்ச்சி, விவசாயிகளின் முயற்சி, பறவைகளின் விஜயம் போன்ற காட்சிகள் கண்களுக்கு விருந்து. புகைப்படம் எடுப்பதிலும் எனக்கு ஆர்வம் இருப்பதனால் அதிசயமான காட்சிகளை, அருமையான காட்சிகளை புகைப்படக் கருவிக்குள் கைதாக்கும் தருணத்திற்காக காத்திருப்பேன்.
தூக்கணாம் குருவியின் கூடுக்கட்டும் விதத்தை பார்த்து பார்த்து அகமகிழ்ந்தேன். சிறிய உருவத்துடன், கவரும் மஞ்சள் நிறத்தை தன்னுள் கொண்ட அந்தப் பறவையின் அலகில் சிறப்புக் கலையை வைத்தானே, இறைவன். தன் கூட்டிற்கான சரியான மரக்கிளையினை தேர்ந்தெடுத்து, சிறு சிறு குச்சிகளை தன் சிறு அலகால் சேகரித்து, கூடு கட்ட துவங்குவதே அழகு.
தனது அலகினால் அந்த குச்சிகளைக் கொண்டு முடிச்சிப் போட்டு, போட்டு கூடுக் கட்டும். அதை புகைப்படம் எடுக்க பல மணி நேரங்கள் கால்கடுக்க நிற்பதே தெரியாது. வயல்களில் பூச்சிகள், பாம்புகளும் இருக்குமோ என்ற அச்சமும் வருவது கூட பின் தள்ளப்படும். சில நேரங்களில் சரியான கோணங்களில் புகைப்படம் எடுக்க அலுமினிய ஏணிகளை வயலுக்கு எடுத்துச் சென்று, அதன் மேல் கூட ஏறி நின்ற தருணங்களும் மனதில் பதிந்துள்ளன. மறக்க முடியாத நினைவுகள்!!!
தற்போது, வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு சென்ற பின்னும் அப்புகைப்படங்கள் பல நேரங்களில் உற்சாகத்தை கொடுக்கும். சமீபத்தில், நாங்கள் ஒரு வேலை விஷயமாக மீண்டும் என் இல்லத்திற்கு சென்ற போது, எங்களுக்கு எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தென்னை மரத்தில் எட்டு தூக்கணாம்குருவிகளின் கூடுகள் எங்களை வரவேற்றது. மகிழ்ச்சியில் திகழ்த்தோம்.
பலவித கோணங்களில் ஆசைத்தீர புகைப்படங்களை என் வீட்டு பால்கனியில் இருந்தே எடுத்தேன்.
இந்த நிகழ்வைப் பற்றி என் உறவினரிடம் கூறிய போது, அவர், ” நீ ரசித்து, ரசித்து தூக்கணாம்குருவிகளின் திறமையை புகைப்படம் எடுத்தாய். இப்பொழுதும் கூட உன் எண்ணங்களிலும் அந்த காட்சிகளே சுழன்றுக் கொண்டிருந்ததால், அந்த இறக்கை நண்பர்களே உன்னைத் தேடி வந்து விட்டது போல இருக்கு,” என்றார்.
என் எண்ண அலைகளில் வலம் வந்த தூக்கணாம் குருவிகளுக்கு, என்னைத் தேடி வந்ததற்காக நன்றி கூறினேன். நல்ல எண்ணம் என்ற விதையை மனதில் விதைத்து, ஆரோக்கிய வாழ்வு வாழ உலக இருதய நாளான இன்று முடிவு செய்தேன்.