சுபாஷிதம் |ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
39. தன் தப்பு தனக்குத் தெரியாது!,
செய்யுள்:
கல: சர்ஷபமாத்ராணி பரச்சித்ராணி பஸ்யதி |
ஆத்மனோ பில்வமாத்ராணி பஸ்யன்னபி ந பஸ்யதி||
பொருள்:
தீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.
விளக்கம்:
சுயவிமரிசனம் செய்து கொள்ளாமல் எப்போதும் பிறர் குற்றங்களைத் தேடுவது சரியல்ல. பிறரிடம் உள்ள குறைகளை விமர்சிப்பதற்கு முன் நம்மிடம் எத்தனை குறைகள் உள்ளனவோ கவனிக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறும் சுலோகம் இது.
சிலர் அதே வேலையாகப் பிறரிடம் உள்ள குற்றங்களை தேடிக் கொண்டே இருப்பார்கள். பிறர் குற்றம் நோக்குபவர்களை நம்பக் கூடாது என்று சுமதி சதகம் கூட எச்சரிக்கிறது. பிறரை நோக்கி ஒரு விரலை நீட்டினால் மீதி விரல்கள் உன்னை நோக்கிச் சுட்டும் என்பது பழமொழி.
ஊழலில் கழுத்துவரை மூழ்கியிருக்கும் அரசியல் கட்சிகள் தம் தப்புகளை மூடிமறைத்து ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தையும் பிற கட்சிகளையும் விமர்சிப்பதும், தம் தோல்விக்குக் காரணம் காட்டுவதும் உலகில் பார்க்கிறோம்.
மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் சரியாக தேர்வுத்தாளை திருத்தவில்லை என்றும் பாடங்களில் இல்லாத கேள்வி கேட்டார்கள் என்றும் ஏதோ ஒரு சாக்கு சொல்வதையும் பார்க்கிறோம். தம் தோல்விக்கான பொறுப்பை ஏற்க மாட்டார்கள்.
தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பிறர் மீது குற்றம் சுமத்தி தப்பித்துக் கொள்ள கூடாது. ‘உன் தவறை நீயே உணர்!’ என்று போதிக்கும் ஸ்லோகம் இது.