சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! : 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
104. உண்மையான தூய்மை!
ஸ்லோகம்:
சர்வேஷாமேவ சௌசானாம் அர்தசௌசம் பரம் ஸ்ம்ருதம் |
யோ௨ர்தே சுசி: ஸ ஹி சுசி: ந ம்ருத்வாரிசுசிஸ்சுசி: ||
– மனுஸ்மிருதி (5 -106)
பொருள்:
சுத்தங்கள் அனைத்திலும் உயர்ந்தது பண விஷயத்தில் சுத்தமாக இருப்பது. பணவிஷயத்தில் தூய்மையாக இருப்பவர் மிகுந்த தூய்மையானவர். பண விஷயத்தில் சுத்தமாக இல்லாதவர் மண்ணாலும் நீராலும் உடலை சுத்தம் செய்து கொண்டாலும் தூய்மையாக மாட்டார்.
விளக்கம்:
மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள நீதி, தர்மம் குறித்த உண்மைகளுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அன்று அவர்கள் அளித்த முத்துக்களான அறிவுரைகள் இன்றைய காலத்துக்கும் பயன்படும் விதமாக உள்ளன.
செல்வத்தில் சுத்தம் என்பது பிறர் பொருளை அபகரிக்காமல் இருப்பது, கையூட்டு பெறாமல் இருப்பது, அளிக்காமல் இருப்பது, எதற்காகப்
பெற்றோமோ அதற்காகவே பணத்தை பயன்படுத்துவது.
உடலுக்குத் தூய்மை சோப்பு, ஷாம்புகளால் கிடைக்கலாம். ஆனால் உள்ளத்தூய்மை உள்ளவர்கள் எத்தனை பேர்? தனக்கு உரிமை இல்லாத பிறர் செல்வம் விஷயத்தில் நேர்மையாக நடந்து கொள்பவர் உண்மையில் தூய்மையானவர் என்பது இந்த ஸ்லோகத்தின் உட்பொருள்.
பண விஷயங்களில்தான் நம் உண்மையான குணம் வெளிப்படும். அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று இங்கே பார்க்கலாம். மறைந்த சிமன்லால் சீதல்வாட் என்பவர் மும்பை பல்கலைக்கழக வைஸ் சான்சிலராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக, பிரபல நீதிபதியாக இருந்தார்.
ஒருநாள் ஒருவர் அவரை சந்திப்பதற்கு வந்தார். தான் செய்த குற்றத்திலிருந்து தப்பித்தால், தனக்கு அனுகூலமாக தீர்ப்பளித்தால்… ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் சிமன்லால் அதனை ஏற்க மறுத்தார். அப்போது அந்த மனிதர், “நன்றாக யோசித்துப் பாருங்கள்! இவ்வாறு என்னைப் போல் லட்ச ரூபாய் கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள்” என்றார்.
அதற்கு சீதல்வாட் கூறினார், “ஐயா! கொடுப்பவர் நிறைய பேர் கிடைப்பார்கள். இத்தனை பெரிய தொகையை மறுப்பவர் உனக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள்!” என்றார். பேராசைக்கு துளியும் ஆளாகாத இதுபோன்ற மனிதர் பணவிஷயத்தில் தூய்மைக்கு உதாரணம். இவரைப் போன்றவர்கள் சமுதாயத்திற்குத் தேவை!