அறிவான வேகம் என்பதனையே விவேகம் என்று அழைக்கிறோம். வி’ என்றால் அறிவு. விவேகம்: என்றால் அறிவான வேகம்.
எதை அறிவான வேகம் என்று சொல்கிறோம் என்றால், ஒரு செயல் செய்வதற்கு முன்னே, எண்ணித் துணிவது. சிந்தித்துத் தெளிவு அடைந்து.முழு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
வெற்றியோ தோல்வியோ இறுதி வரை போராடிச் செயல் ஆற்ற வேண்டும். துணிந்த பிறகு மீண்டும்,பின் வாங்குவதையோ, இழுக்கு என்று மனதுக்குள் நினைப்பது இது தான் அறிவான விவேகம்.
விவேகம் உள்ளவர்களைத் தான் விவேகி என்பார்கள். அவர்கள் செயலிலே வேகம் இருக்கும். சிந்தையிலே விவேகம் இருக்கும். ஒருவிதக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தே இவர்கள் செயல்படுவார்கள்.
விவேகம் என்பதற்கு பகுத்தறிவு, புத்திக் கூர்மை, மதிநுட்பம், ஞானம் அறிவு, சாமர்த்தியம் என்று பொருள் கொள்ளலாம்.
விலங்கினங்கள் எதற்குமே அடிமை ஆவதில்லை. ஆனால், மனிதனே, பணத்தாசை பிடித்தவனாக, பாசத்தால் பலவீனமானவனாக உயிருக்குப் பயப்படுவனாக, முரடனாக, அப்பாவியாக, பல்வேறு பட்ட குணம் படைத்தவனாக இருக்கிறான்.
இதனால் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய சூழலில் விவேகம் என்பது தீமையைக் குறைத்து நன்மையை நாடுவதாகும்.
கடும் போட்டிகள் சவால்கள் நிறைந்த இன்றைய உலகில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று விவேகம். அடுத்து என்ன செய்வது? என்று எல்லா காலக் கட்டங்களிலும் தெளிவாக அறிந்து இருப்பது தான் விவேகம்.
கடலின் ஆழத்தில் முத்தைக் கண்டு பிடிப்பது போல பிரச்சனைகளின் ஆழத்தில் முடிவை, தீர்வைக் கண்டு பிடிக்கிறது விவேகம். விவேகம் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்து விவேகத்துடன் எதிர்கொண்டு கடந்து வந்தவர்களே இன்றைய வெற்றியாளர்கள்.,
ஆம்.,நண்பர்களே.., எது சரி, எது தவறானது என சிந்தித்து முடிவு செய்வதே விவேகமாகும்.
இருள் தடுமாறச் செய்கிறது. விவேகம், ஞானம் என்கிற வெளிச்சம் உற்சாகம் தருகிறது. அபரிதமான நம்பிக்கையைத் தருகிறது. விடியலைக் காண்கிறது.
- அன்புடன் தோழர் கற்பகராஜ்
???? தினசரி. காம் ????