ஒருவர் மேல் அன்பு கொண்டிருப்பதை என் இதயத்தில் நீதான் இருக்கிறாய் என்று நாம் சொல்வதுண்டு. நான் உன் மேல் எவ்வளவு அன்பு கொண்டுள்ளேன் தெரியுமா? என்று கேட்டு இதயத்தை திறந்து காட்ட நான் என்ன அனுமாரா பதில் சொல்வார்கள்.
ராமநாமத்தைத் தவிர வேறு எதுவும் அறியாத ஆஞ்சநேயர் பிறவி முழுவதும் ஸ்ரீராமனுக்கு சேவை செய்யவே என்று வாழ்ந்து வந்தார். ராமா என்று உருகி அழைத்தால் ஸ்ரீ ராமருக்கு முன் ஆஞ்சநேயன் வந்து துணை நிற்பார்.
ஆஞ்சநேயரை வணங்க தனி ஸ்லோகம் எல்லாம் தேவையில்லை. அனுமன் காயத்ரி மந்திரம் கூட ராமா என்ற சொல்லுக்கு பிறகுதான். அவ்வளவு சக்தி உண்டு ராமா என்னும் இரண்டு எழுத்துக்கு…. அதெல்லாம் சரி அனுமன் நெஞ்சை பிளந்து காண்பித்த கதையைப் பலமுறை படித்திருப்போம்.
ஆனால் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஆஞ்சநேயரின் மீது பக்தி கொள்வதா? அவரை ஆட்கொண்ட ஸ்ரீராமரின் மீது பக்தி கொள்வதா? என்னும் அளவுக்கு மனம் ஆன்மிக சிந்தனையில் மூழ்கிவிடும்.
14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்தார்கள். இராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்ஜியம் கிடைக்கப் பெற்றது.
அங்கதன் இராஜகுமாரனானான். இலங்கையின் அரசனாக விபீஷணன் மகுடம் சூடினான். ஆனால் சஞ்சீவி மலையையும், கடலையும் கடந்து சாதனை புரிந்த அனுமன் அலட்டிக்கொள்ளவில்லை. ஸ்ரீ ராமனுடன் இருந்து அவருக்கு சேவை செய்து அவரை கண்ணால் பார்த்துக்கொண்டு இருந்தாலே பாக்கியம் என்று கருதினார்.
அனுமனைக் கண்ட இராமனின் முகத்தில் அளவில்லா அன்பு பூத்தது. என்னைப் போன்றே உன்னையும் வணங்குவார்கள் என்று வாழ்த்தினார்.
பட்டாபிஷேகத்தில் மக்களும், முனிவர்களும், பெரியோர்களும் வாழ்த்த.. மங்கல கீதங்கள் மகிழ்ச்சியாக ஒலிக்க.. வேதங்கள் முழங்க.. இராமனும் சீதாதேவியும் அரியணையில் அமர்ந்தார்கள். ஸ்ரீ ராமரின் சகோதரர்கள் வெண்சாமரம் வீசுவதும், வெண்கொற்றக் குடைபிடிப்பதும்,உடை வாள் ஏந்துவதுமாக பணிகள் செய்ய ஸ்ரீராமரின் பாதத்தில் ஆஞ்சநேயர் அமர்ந்திருந்தார்.
ஸ்ரீராமரின் பார்வை அனுமனை நோக்கியது. உன் பக்தியை அளவிட முடியாது. எனக்கு உதவி செய்வதில் உனக்கு இணையாக யாரும் கிடையாது. நான் உனக்கு என்ன செய்ய போகிறேன் மாருதி.. உன் பக்திக்கு இணையாக விலை மதிப்புள்ள பொருள்களோ, பதவியோ இருப்பதாக நான் அறியேன்.
உன் உடல், மனம் அனைத்தையும் எனக்காகவே அர்ப்பணித்துவிட்டாய். அதற்கு ஈடாக உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் என் அன்பு தவிர வேறு எதுவும் இல்லை என்று கண்ணீர் துளிகள் சிந்த அனுமனை கட்டியணைத்தார். அனுமனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இல்லை
சுவாமி உங்கள் அன்பை பெறும் அளவுக்கு நான் பொருத்தமானவனாக இருப்பதே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதை விட பெரிய பேறு வேறு என்ன இருக்கிறது. பெறுவதற்கு அரிய பேறாகிய உங்கள் அன்பை பெற நான் புண்ணியம் செய்திருக்கிறேன் என்று பக்தி பரவசத்தில் கூறினார்.
ஸ்ரீ ராமனுக்கும், அனுமனுக்கும் நடந்த உரையாடலை பக்கத்தில் இருந்த சீதாதேவி கேட்டாள். இருவருக்கும் இடையிலான பக்தியைப் பற்றி சீதா தேவி அறிவாள். தான் அனுமனுக்கு ஏதேனும் தர வேண்டுமே என்று நினைத்து விலை மதிப்பில்லா ஒளிவீசும் முத்துமாலையை, இது என்னுடைய பரிசு.. நீ வைத்துக்கொள் என்று கொடுத்தாள்.
எல்லையில்லா ஆனந்தத்துடன் வாங்கிய அனுமன் அடுத்து செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விலை மதிப்பில்லா முத்து மாலையிலிருந்து ஒவ்வொன்றையும் கடித்து உடைத்து பார்த்துகொண்டிருந்தார் .(குரங்கு கையில் பூமாலை என் று சொல்கிறோமே பொருள் புரிகிறதா) சீதா தேவிக்கு சங்கடமாகிவிட்டது. என்னாயிற்று அனுமன். விலை மதிப்பில்லா முத்துக்களை உடைக்கிறாயே என்றாள். சுற்றியிருந்தவர்கள் அனுமனை வசை பாடினர். அனுமனுக்கு ஏதோ ஆயிற்று… அவனை விரட்டுங்கள் என்றெல்லாம் பேசினார்கள்.
ஸ்ரீ ராமனுக்கு தெரியாததா… சிறிது நேரம் கழித்து என்னாயிற்று மாருதி என்றார். எப்பொருளிலும் உங்களை மட்டுமே காணும் எனக்கு முத்து மணியிலும் உங்களைக் காண ஆவலாயிற்று.. அதான் ஒவ்வொன்றாக உடைத்துப் பார்த்தேன். ஆனால் உங்களின் உருவம் அதில் தென்படவில்லை.
நீங்கள் இல்லாத ஒன்று என்னிடம் எதற்கு இருக்க வேண்டும் அதான் அனைத்தையும் உடைத்துவிட்டேன் என்றார். சுற்றியிருந்தவர்கள் எக்களித்தார்கள். மாட்டிக்கொண்டதும் தப்பிக்க அனுமன் சூழ்ச்சி செய்கிறான் என்றனர்.
நீ எப்போதும் என்னை நினைப்பது இருக்கட்டும். இத்தருணம் நான் உன்னுள் அடங்கியிருக்கேனா? அப்படியானால் அதை இப்போது காட்ட முடியுமா என்றார். ஆகட்டும் சுவாமி என்ற ஆஞ்சநேயர் சுற்றியிருந்தவர்களின் கொக்கரிப்பை அலட்சியம் செய்தவாறு நெஞ்சை பிளந்தார்.
சீதாவின் மனம் கவர்ந்தவன்.. அனுமனின் பக்தியைக் கொண்டவன் சீதாராமராக ஆஞ்சநேயரின் நெஞ்சில் அமர்ந்திருந்தார். குழந்தை கண்ணன் வாயை திறந்து காட்டிய போது உலகமே இயங்கியதாம்.. ஆனால் ஆஞ்சநேயர் நெஞ்சை திறந்து காட்டிய போது உலகை ஆளும் பரம்பொருளான சீதாராமர் தெரிந்தாராம்.
அனுமனின் அன்பை அறியாதவரா ஸ்ரீ ராமர். அனைத்தும் அறிந்தவர் தான் ஆனால் அனுமனை அனைவரும் அறிய வேண்டுமே.. அதான் நெஞ்சை பிளந்து காண்பித்து அனுமனின் அன்பை நிரூபித்துவிட்டார். இனிமேல் ஆஞ்சநேயரை பார்த்தால் ராமா… ராமா.. என்று சொல்லுங்கள். ஆஞ்சநேயரும், அவர் மனதில் குடியிருக்கும் ஸ்ரீ ராமரும் இணைந்தே நமக்கு அருள் புரிவார்கள். ஸ்ரீராம் ஜெயராம் ஸ்ரீராம் ஜெயராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம