காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், உள்ள தங்கம் மற்றும் வெள்ளி பல்லிகளின் உருவங்களை தலை முதல் வால் வரை தடவுவதன் மூலம் பல்லியால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.
பல்லி விழும் தோஷத்தால் சில சங்கடங்கள் அன்றாட வாழ்வில் ஏற்படலாம் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றால் அமைந்த இரு பல்லிகளின் உருவங்கள் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை தலை முதல் வால் வரை தடவுவதன் மூலம் பல்லியால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.
ஒரு முறை வரதராஜப் பெருமாளை தரிசிக்க ஒரு பக்தர் தனது மனைவியுடன் வந்திருந்தார். அப்போது கோவில் நடை சாத்தப்படும் நேரமாகிவிட்டது. அதனால் அவசர அவசரமாக அந்த பக்தர்கள் வரதராஜரின் சன்னிதிக்கு முன்புள்ள பாதையை “வரதா” என்று சொல்லி கடந்தார். அப்போது வலது காலில் ஒரு பல்லியும், இடது காலில் இன்னொரு பல்லியும் மிதிபட்டு நசுங்கின.
அந்த இரு பல்லிகளும் உடல் நசுங்கி இறக்கும் தருவாயில், வரதராஜப் பெருமாள் அந்த பல்லிகளுக்கு காட்சியளித்து, “எனது பக்தனின் பாதங்களை தாங்கிய நிலையில் இறந்த காரணத்தால் உங்களுக்கு நித்ய முக்தி அளிக்கிறேன்.
நீங்கள் என்னுடனேயே எப்போதும் தங்கப் பல்லியாகவும், வெள்ளிப் பல்லியாகவும் இருப்பீர்கள். உங்களை தொட்டு, எனது பெயரைச் சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு ஏற்பட்ட பல்லி தோஷம் அகன்று, சாபத்தில் இருந்து விடுபடுவார்கள்” என்று அருள்புரிந்ததாக ஒரு கதை கூறப்படுகிறது.
மற்றொரு கதையாக ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்டு முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.
பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என கூறிவிட்டார்.பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.பெருமாள் உங்கள் ஆத்மா வைகுந்தம் செல்ல சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோசம் நீங்கி ஷேமம் உண்டாகும்.
சூரியன் சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார். ஆகையால் இத்தரிசனம் மிக முக்கியமானதாகும். தோஷ நிவர்த்தி பெற இந்த பல்லிகளை வணங்குகிறார்கள்.